அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்!
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் பெயராக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாறியுள்ளார். அவர் பாஜகவில் தொடர்வாரா, புதிய கட்சி தொடங்குவாரா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், பாஜக தேசிய தலைமையின் சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும், அண்ணாமலை தனது புதிய கட்சி திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் அண்ணாமலை இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலையின் பிறந்த நாளான ஜூன் 4-ம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் இருந்தது. ஆனால், அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்ன தகவல்படி, புதிய கட்சி தொடங்குவது உறுதி என்றாலும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடமாட்டார் என்கின்றனர்.

டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக பாஜகவில் உள்ள பிரச்சனைகள், கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்திகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை
அண்ணாமலையை கட்சியில் தொடர வைக்க தேசிய தலைவர்கள் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அண்ணாமலை தனது தனிப்பட்ட அரசியல் பாதையை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
புதிய கட்சி
இதற்கிடையே, புதிய கட்சி தொடர்பான பல தகவல்கள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவி வருகின்றன. கரூரைச் சேர்ந்த ஒருவர் தேர்தல் ஆணையத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும், அந்த கட்சியின் பெயர் "தமிழக மக்கள் கழகம்" அல்லது "தமிழக மக்கள் கட்சி" என இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அமைப்பை அண்ணாமலை ஏற்றுக்கொண்டு அரசியல் இயக்கமாக மாற்றும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த்
ஆனால், இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை தனது நெருங்கிய ஆதரவாளர்களிடமே கூட வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவரது அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. மற்றொரு புறம், நடிகர் ரஜினிகாந்தை அண்ணாமலை பல முறை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என கருதப்படுகின்றன. இதன் காரணமாக, எதிர்காலத்தில் அண்ணாமலை மற்றும் ரஜினிகாந்த் ஒரே தளத்தில் செயல்படுவார்களா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
வீ தி லீடர்ஸ்
அதேநேரத்தில், அண்ணாமலை தொடங்கி நடத்தி வரும் "வீ தி லீடர்ஸ்" அறக்கட்டளையின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. சமூக சேவை அமைப்பாக செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளையை படிப்படியாக அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும், அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் சமூக வலைதள குழுக்கள் புதிய கட்சியின் சின்னம் குறித்து கருத்துக் கணிப்புகளையும் நடத்தி வருகின்றன. ஆட்டோ, பேருந்து, கிரிக்கெட் மட்டை, வேன் உள்ளிட்ட பல்வேறு சின்னங்களை முன்வைத்து ஆதரவாளர்களின் கருத்துகளை சேகரித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம்
இதற்கிடையில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானதும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவருக்கு ஆதரவாக உள்ள சில நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இதனால் நிலைமை சிக்கலாக மாறியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் அண்ணாமலை இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications