அண்ணாநகரில் கஞ்சா போதையில் இளைஞர் அலப்பறை! போலீஸுக்கு நைட்டியில் வாய்சவடால்! கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை அண்ணாநகரில் நைட்டியுடன் வந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கங்கை அமரன் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர் தன்னை பெரிய ரவுடி என காட்டிக் கொள்ள நைட்டி அமரன் பாய் என்ற பெயரில் மிரட்டி மாமுல் வசூலித்து வந்ததும் தெரியவந்தது.
கஞ்சா போதையில் பேஸ்புக் லைவில் ஒரு இளைஞர் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல் துறை ஆணையர், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் மீது அவதூறாக பேசினார். மேலும் அந்த லைவ் வீடியோவிலேயே கஞ்சா பற்ற வைத்து புகைத்து அண்ணா நகரில் தன்னை யாராவது நெருங்கினால் வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என்றும் சினிமா வில்லன் ரேஞ்சுக்கு பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் இந்த வீடியோவை பதிவிட்ட நபரின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீஸார், அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போதுதான் அந்த செல்போன் சிக்னல் அண்ணாநகரில் உள்ள லோட்டஸ் காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதை காட்டியது.
உடனே அண்ணா நகர் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்து அந்த நபரின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது அவர் கதவை திறக்காமல் திடீரென பாக்ஸிங் கிளவுஸ் போட்டுக் கொண்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்தார்.
பிறகு அந்த ஜன்னல் மீது ஏறிக் கொண்டு என்னை பிடித்து விட முடியுமா என கேட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். மீண்டும் அந்த நபரை பிடிக்க காவல் துறையினர் முற்பட்ட போது திடீரென வீட்டுக்குள் சென்ற அவர், நைட்டி அணிந்து கொண்டு ஜன்னல் வழியாக வந்து மீண்டும் மிரட்டியுள்ளார்.
ஹவுஸ் ஓனர் எங்கே என போலீஸார் அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது கூட ஹவுஸ் ஓனரை அந்த நபர் ஆபாசமாக பேசினார். பிறகு தீயணைப்பு துறையினர் ஏணி மூலம் ஏறி அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது தப்ப நினைத்த அந்த நபர் திடீர் ட்விஸ்ட்டாக தவறி கீழே விழுந்தார்.
அவருடைய கையில் எலும்பு உடைந்துவிட்டது. அத்தனை உதார் விட்டுவிட்டு வலியால் துடித்த அவரை போலீஸார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவருடைய வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது ஏதோ மர்ம பொருள் கிடைத்துள்ளது. அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் நைட்டியில் வந்து மிரட்டல் விடுத்த அந்த நபர் அண்ணா நகரை சேர்ந்த கங்கை அமரன் என்பதும், இவர் ஓட்டேரியை சேர்ந்த ரவுடி ஒருவரிடம் உதவியாளராக இருந்ததும் தெரியவந்தது. இதை வைத்து பலரை நைட்டி அமரன் பாய் என மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications