"நீ உயிரோடு இருக்கிறாய் அண்ணா".. அண்ணாவுக்கு வைரமுத்து புகழ் வணக்கம்
சென்னை: அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து அண்ணாவை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 57 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அண்ணா சிலைக்கும், அவரது உருவப் படத்துக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலஜா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா, திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"வான்நீலம் உள்ளவரை
கடல் இருக்கிறது
என்று பொருள்
மாற்றங்கள் உள்ளவரை
பசி இருக்கிறது
என்று பொருள்
தமிழ்நாடு
என்ற சொல்லுக்குள்
உயிராடல் உள்ளவரை
நீ உயிரோடு
இருக்கிறாய் அண்ணா!
இருமொழிக் கொள்கையென்ற
எரிதழல் உள்ளவரை
உன் அக்கினி
அணையாது அண்ணா!
அடித்தட்டுக் கடைமனிதன்
அதிகாரம் பெறும்வரை
உன் உயிர்
உலாவிக்கொண்டிருக்கும்
அண்ணா!
பகைவர்கள்
அடிக்கடி தரும் நெருக்கடி
உன் தேவை இன்னும்
தீரவில்லை என்கிறது
தீர்க்கமாக
உன்னை அறியாமல்
உன் பெயரை மட்டுமே
அறிந்த தலைமுறை
உன் கொள்கையென்னும்
குன்றேறி நின்றால்
அடுத்த நூற்றாண்டிலும்
நீயே ஆள்வாய் அண்ணா!
யுகச் சவாரியில்
காலத்தின் கடைக்கோடிவரை
நீள்வாய் அண்ணா!
பள்ளி மாணவனாய் அழுத
கண்ணீரின் மிச்சம்
இப்போதும் கசிகிறது
கண்ணின் கடைவிழியில்
புகழ் வணக்கம்".
என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications