மாவட்ட நீதிபதி பணியிடங்கள்.. ஆண்டு தோறும் தேர்வு நடத்தலாம்.. ஹைகோர்ட் யோசனை
சென்னை: நிலுவை வழக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வை ஆண்டு தோறும் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் , தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து மூன்று ஆண்டுகளில் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் நால்வர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் கே ராஜசேகர் அமர்வு, ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக நீதிபதிகள் தேர்வு நடைபெறாத நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், இதே கோரிக்கைகளுடன் மற்றவர்களும் வழக்கு தொடரக் கூடும் எனவும், இதனால் தேர்வு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக்கறிஞராக பணியாற்றி கொண்டிருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையிலேயே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதால அதனை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
நிலுவை வழக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வை ஆண்டு தோறும் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமிழகத்தில் காலியாக உள்ள 50 மாவட்ட நீதிபதி பதவிக்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டிருந்து. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி அவகாசம் அளித்திருந்தது. அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதற்கு 10+2 என்ற முறையில் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் சட்டப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 2009 -2010 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞராக பணி அனுபவம் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும் என்றும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 47 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, வைவா வாய்ஸ் டெஸ்ட் ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. நேற்றுடன் விண்ணப்பிக்க அவகாசம் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications