சென்னைக்கு விழுந்த அடி! ஓவர்டேக் செய்யும் பெங்களூர்! உள்ளே பரந்தூர் வந்தால் ஆட்டமே வேற- என்ன மேட்டர்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சரக்குகளைக் கையாளும் திறன் குறைந்து வரும் நிலையில், இதனால் சென்னைக்கு வரும் வாய்ப்புகள் மற்ற அண்டை மாநிலங்களுக்குச் செல்கிறது. இது பரந்தூர் விமான நிலையம் குறித்த விவாதத்தையும் எழுப்பி இருக்கிறது.
தெற்கு ஆசியாவில் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. இந்தியாவில் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட சென்னை ஏர்போர்ட் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.

ஆனால், அதிர்ச்சி தரும் வகையில் சென்னை விமான நிலையம் கையாளும் சரக்குகளின் அளவு என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. மற்ற ஏர்போர்ட்களுடன் ஒப்பிடும் போது சரக்குகளைக் கையாள்வதில் சென்னை விமான நிலையம் பின்தங்கி உள்ளது.
சரக்கு சேவை: கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் சென்னை ஏர்போர்ட் 2.77 லட்சம் டன்களை கையாண்டு இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் சென்னை ஏர்போர்ட் 2.84 லட்சம் டன் சரக்கைக் கையாண்ட நிலையில், இன்று அது 2.6% குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் பார்க்கும் போது சென்னை ஏர்போர்ட் மே (28,800 டன்), அக்டோபர் (27,754 டன்) மற்றும் டிசம்பர் (28,024 டன்) ஆகிய 3 மாதங்களில் மட்டுமே அளவு சரக்குகளைக் கையாண்டு இருக்கிறது.
இந்தியா முழுக்க இதே நிலை என்று சொல்ல முடியாது. இதே காலகட்டத்தில் பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா ஏர்போர்ட்கள் 4 முதல் 8 சதவிகிதம் வரை கூடுதல் சரக்கைக் கையாண்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் சென்னை ஏர்போர்ட் சரக்குகளைக் கையாள்வதில் புதிய சாதனையைப் படைத்த நிலையில், அதன் பிறகு சரக்கு சேவை தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த 2022-23 நிதியாண்டில் கூட சரக்கைக் கையாள்வது 1.5% வரை குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரச்சினை என்ன: அதாவது பயணிகள் விமானம் அதிகரித்த உடன் சரக்கு விமானம் குறைந்துள்ளது. பயணிகள் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் என இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள்வதில் சென்னை ஏர்போர்ட்டிற்கு இருக்கும் சிக்கல்களே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மிகப் பெரிய ராட்சத சரக்கு விமானங்களைக் கையாளக் கூடுதல் டாக்ஸிவேகள் தேவை. ஏர்போர்ட் விரிவாக்கம் செய்யவும் அங்கே நிலம் இல்லாத நிலையில், அதுவே பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும்.
தென்கிழக்கு ஆசியாவுடன் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் முக்கியமான இடத்தில் சென்னை இருக்கிறது. இதனால் தான் சென்னையில் எப்போதும் பிராந்திய சரக்கு போக்குவரத்தைக் காட்டிலும் சர்வதேச வர்த்தகத்திற்கு இங்கே முக்கியத்துவம் அதிகம் இருக்கும். கடந்தாண்டு ஏப்ரல்- ஜனவரி காலத்தில், சென்னை 67,000 டன் உள்நாட்டுச் சரக்குகளை மட்டுமே கையாண்டுள்ள நிலையில், 2.09 லட்சம் டன் சர்வதேச சரக்குகளைக் கையாண்டது.
சென்னை ஏர்போர்ட்: அதாவது சரக்கு போக்குவரத்தில் சர்வதேச வர்த்தகம் தான் சென்னைக்குப் பிரதானம். ஆனால், விமான நிலையத்திற்கு அந்தளவுக்குத் திறன் இல்லாததால் அது சரக்கு கையாளும் திறனைக் கடுமையாகப் பாதிக்கிறது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூட இதையே தான் சொல்கிறார்கள். பெங்களூர் விமான நிலையத்தில் நிலத்திற்கு எல்லாம் பஞ்சம் இல்லை. எனவே அவர்களால் எளிதாக விரிவாக்கம் செய்ய முடியும் என்பதால் சென்னையைப் பெங்களூர் உடன் ஒப்பிட வேண்டாம் என்கிறார்கள்.
இதன் காரணமாகச் சென்னைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஏர்போர்ட்களுக்கு செல்கிறது. இது சென்னைக்கு புதிய விமான நிலையம் எந்தளவுக்கு உடனடியாக தேவை என்பதைக் காட்டுகிறது. பரந்தூரில் விமான நிலையத்தை அமைப்பது குறித்த அறிவிப்பு வந்தாலும், அதில் சிக்கல்கள் தொடர்கிறது. அந்த பிரச்சினைகளைச் சரி செய்து உடனடியாக பரந்தூரில் புதிய ஏர்போர்ட் கட்டவில்லை என்றால் சென்னைக்கான வாய்ப்புகள் மேலும் குறையும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications