அடுத்தடுத்து பாயும் அம்புகள்! அதிமுக பொதுக்குழு நடக்குமா? தடை கோரி நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு!
சென்னை : அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் வழக்கம் போல் சென்னை வானகரத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.

அதிமுக பொதுக்குழு
அதில், "2017-ல் நடந்த பொதுக்குழுவில் கட்சி விதிகளுக்கு புறம்பாக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்பதவிகளை அங்கீகரித்து, எந்த ஆவணத்தையும் தேர்தல் ஆணையம் கட்சிக்குத் தரவில்லை." என கூறியிருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் ஒரு மனு தாக்கல்
மனுதாரர் சூரியமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்பதால், உட்கட்சி விவகாரங்களில் தலையிட அவருக்கு உரிமைஇல்லை என்று கோரியிருந்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடை வேண்டும்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை என கூறியுள்ளார். உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை எனவும் கூறி, அதுதொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆதரவு நிர்வாகிகள்
எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான நியமனத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

அடுத்த வாரம் விசாரணை
எனவே இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், அதிமுக உட்கட்சி தேர்தல் அலுவலர்களான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்தக்கோரியும், நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரியும் மனுவில் தெரிவித்துள்ளர். பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் எண்ணிடும் பணி நடைமுறைகள் முடிந்த பிறகு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications