தீவிரமடையும் இந்தி எதிர்ப்பு! களமிறங்கிய இந்திய மாணவர் சங்கம் -இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்!
சென்னை: இந்தித் திணிப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தி திணிப்பை தமிழகத்தில் ஒரு போதும் எள்ளளவும் அனுமதிக்க மாட்டோம் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அலுவல் மொழி குழு
அலுவல் மொழி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமித் ஷாவின் பரிந்துரைகள் இந்தியை திணிக்கும் வகையில் இருப்பதக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இதனிடையே அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக அண்மையில் தமிழக சட்டசபையில் கூட இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்தித் திணிப்பு
ஆங்கிலத்தின் இடத்தை இந்தியைக் கொண்டு ஈடு செய்ய திட்டமிட்டு பாஜக அரசு செயல்படுவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியதோடு அலுவல் மொழி குழுவிலிருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என கோரியிருந்தார். இதேபோல் திமுகவும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி தங்கள் எதிர்ப்பை மிகக் கடுமையாக பதிவு செய்தது. இதையடுத்து தமிழ் உணர்வாளர்கள், ஆர்வலர்கள் தன்னெழுச்சியாக இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்திய மாணவர் சங்கம்
அந்த வகையில் நேற்றுக் கூட தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் சென்னையில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தியை எள்ளளவும் தமிழகத்தில் திணிக்கவிட மாட்டோம் என முழக்கம் எழுப்பிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

திரும்பப்பெறுக
அமித்ஷா தனது பரிந்துரைகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்திய இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தொடர்ந்து இனியும் இந்தி திணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் போராட்டங்கள் தொடரும் என எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications