கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் குறித்து பேஸ்புக்கில் மோசமாக அவதூறாக சித்தரிப்பு.. ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடுக்குமாடி அலுவலகத்தை சமூக வலைதளத்தில் அவதூறாக களங்கப்படுத்திய சமூக விரோதிகள் மீது இரும்பு கரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் அமைந்துள்ளது. 8 அடுக்கு மாடி கொண்ட கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை உள்ளிட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்து, அதன் தலைப்பில் மோசமான ஆபாச வார்த்தையை குறிப்பிட்டு ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் பெண் உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவதூறு செய்யும் பதிவும் அதில் இடம் பெற்று இருந்தது.. இத்தகைய கீழ்த்தரமான பதிவும் அதனுடைய பின்னூட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க கோரி வரும் 22ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து அறிவித்துள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முகநூல் பதிவில் "
சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அடுக்குமாடி அலுவலகம், சில சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீய செயல் கடும் கண்டனத்திற்குரியது.
களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்திற்குப் புறம்பான இது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அந்தக் கட்சிக்குத்தானே நடந்திருக்கிறது என்று இப்போது அலட்சியப்படுத்தினால், பின்னர் ஆளும்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இதுபோன்று நடந்துவிடக்கூடும் என்பதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications