அசால்ட்டாய் அடித்த அன்வர் ராஜா.. தட்டித் தூக்கிய திமுக! எடப்பாடி பழனிசாமிக்கு எதுவுமே தெரியாதா? ஷாக்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்து இருக்கிறார். இன்று காலை திமுகவில் இணையப் போவதாக செய்தி வெளியான பிறகு தான், அதுவும் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற பிறகுதான் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் முக்கிய தலைவர் ஒருவர் திமுக தரப்புக்கு செல்ல இருப்பது கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? என அதிமுகவினரே கேள்வி எழுப்புகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் பாஜக கூட்டணியால் அதிமுகவில் இருக்கும் பல நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக ஜெயக்குமார், அன்வர் ராஜா, வளர்மதி, வீரமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் நேரடியாகவே இது தொடர்பாக பேசி இருந்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி போன்ற சீனியர் அமைச்சர்களின் வற்புறுத்தலால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.

பாஜக கூட்டணி
2019 தேர்தலுக்குப் பிறகு தனித்தும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அதிமுக பல தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தது. பாஜக கூட்டணியால் தான் தாங்கள் தோற்க நேரிட்டது என பல அமைச்சர்களே வெளிப்படையாக பேசினர். குறிப்பாக ராயபுரம் தொகுதியில் தான் தோல்வியடைய காரணமே பாஜக தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக பேசியிருந்தார். அதிமுக பாஜக கூட்டணி உடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் அவர்தான்.
அன்வர் ராஜா
ஆனால் தற்போது கடும் எதிர்ப்பையும் மீறி பாஜக கூட்டணியை எடப்பாடி அமைத்திருக்கும் முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் அன்வர் ராஜா. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவரது நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த அன்வர் ராஜா, ஓபிஎஸ் -எடப்பாடி- சசிகலா மோதல் காரணமாக சற்றே விலகி இருந்தார். அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் மீண்டும் அதிமுகவுக்கு வந்த நிலையில் அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி தரப்பட்டது.
திமுகவில் ஐக்கியம்
இந்த நிலையில் பாஜக கூட்டணி குறித்து தனது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வந்தார் அன்வர் ராஜா. அது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக தலைமை விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை அன்வர் ராஜா திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
திமுக அமைச்சர்
சமூக வலைதளங்களில் சில பத்திரிக்கையாளர்கள் இந்த தகவலை கசிய விட்டனர். தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் சென்ற அதற்குப் பிறகு அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
இணைந்ததன் பின்னணி
இந்த நிலையில் அன்வர் ராஜா திமுகவில் சேரும் விஷயம் கடைசி நேரத்திற்கு சற்று முன்பு நான் வெளியே தெரிந்ததாகவும், அதனால்தான் அவசர அவசரமாக அன்வர் ராஜாவை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் என்கின்றனர். திமுக தரப்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவை கையில் வைத்திருக்கும் அமைச்சர் அன்வர் ராஜாவுடன் ரகசியமாக பேச்சு நடத்தி வந்ததாகவும் அவரது ஏற்பாட்டின் பேரில் தான் அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருக்கிறார் என்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள் என்று கூட கணிக்க முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பலவீனமாக இருப்பதாக அதிமுகவினரே குற்றம் சாட்டுகின்றனர். பலமான கூட்டணி, தனித்து என கூறிவரும் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி நிர்வாகிகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் பல ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்த முக்கிய தலைவர் ஒருவர் எதிர்முகாமுக்கு செல்வது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், அவரை பின்பற்றி மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் திமுக தரப்பில் தஞ்சம் புகலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications