அமித் ஷா முதல் அண்ணாமலை வரை.. பதிலடி கொடுத்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த சைலண்ட் வார்னிங்!
சென்னை: கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்கள் மூலமாக அதிமுகவுக்கு பாஜக சில பிரச்சனைகளை கொடுத்து வந்த நிலையில், அன்வர் ராஜா மூலமாக அதிமுக சரியான நேரத்தில் பதிலடி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று அன்வர் ராஜா மூலமாக அதிமுக பேசி இருப்பது, பாஜகவுக்கான மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் கட்சி தலைமை, தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு ஏற்படுவதற்கு ஏற்படும் தாமதத்தை சரி கட்டவே இந்த நடவடிக்கை என்று கூறியது.

பாஜகவின் சீண்டல்
ஆனால் கூட்டணி அமைந்த நாளில் இருந்தே அதிமுகவை பாஜகவும், பாஜக நிர்வாகிகளும் சீண்டுவதை வழக்கமாக வைத்திருந்தனர். கூட்டணி ஆட்சி என்ற வார்த்தை மூலமாக பாஜக தலைவர்கள் சீண்ட, அதிமுக தரப்பில் கூட்டணி ஆட்சி தான்.. ஆனால் அமைச்சரவையில் பங்கு கிடையாது, அதிகாரத்தில் பங்கு கிடையாது என்று விளக்கம் கொடுத்தனர்.
அண்ணாமலையின் அதிர்ச்சி
அதேபோல் அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால், அதனை பாஜக ஆட்சி என்றே கூறுவேன் என்று கூறினார். மதுரை வந்த அமித்ஷாவும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. அதனால் அதிமுகவைச் சேர்ந்தவரே முதல்வர் என்று அமித்ஷா பேட்டி அளித்தார்.
அமித்ஷா சம்பவம்
எடப்பாடி பழனிசாமியின் பெயரையே அமித்ஷா தவிர்த்தது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல் அதிமுகவின் வழிகாட்டிகளான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரை முருகன் மாநாட்டில் கொச்சைப்படுத்தினர். அதுவும் அதிமுக தலைவர்களை அழைத்து இந்த சம்பவத்தை பாஜக மற்றும் இந்து முன்னணி செய்தது.
அதிமுக பதிலடி
இது உள்ளூர் அதிமுகவினருக்கே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே அதிமுக தரப்பில் சரியான நேரத்தில் பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக நடந்த அதிமுக கூட்டத்தில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி அட்டாக்
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு அமித்ஷா மற்றும் பாஜகவினருக்கு அளிக்கப்பட்ட பதிலாக பார்க்கப்பட்டது. அதேபோல், இன்று அன்வர் ராஜா அளித்துள்ள பேட்டியில், பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்தது இயல்பான ஒன்றுதான். தேர்தலில் பெரும்பான்மை இடங்களை அதிமுக கைப்பற்றும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சிற்கே இடமில்லை.
அன்வர் ராஜாவின் எச்சரிக்கை
முதல்வர் தேர்தலில் பாஜகவின் திட்டம் பலிக்காது. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர். தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருநாளும் பலிக்காது என்று தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள பாஜகவை நேரடியாகவே அன்வர் ராஜா விமர்சித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீண்டலுக்கு முடிவு
ஆனால் அதிமுக தரப்பில் இது திட்டமிட்ட பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாஜகவினர் தொடர்ச்சியாக சீண்டிக் கொண்டே இருந்த நிலையில், அதிமுக அமைதி காத்தால் சரியாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார். இதன் காரணமாகவே அன்வர் ராஜா மூலமாக பாஜகவுக்கு மறைமுக எச்சரிக்கையை கொடுத்துள்ளார் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications