சென்னை-கோவை வந்தே பாரத் ரெடி.. அத்துடன் இந்த மாதமே 4 புதிய ரூட்களில் வரும் வந்தே பாரத்! அடடே சூப்பர்
சென்னை: இன்னும் சில நாட்களில் சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னை- கோவை மட்டுமின்றி மேலும் 4 வழித்தடங்களில் இந்த மாதமே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
உலகில் மிகப் பெரிய நெட்வோர்களில் ஒன்றாக இந்திய ரயில் கட்டமைப்பு உள்ளது. நாட்டின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவில் ரயில் சேவை இருக்கிறது.
மேலும், விலை குறைவு, டிக்கெட் எளிதாகக் கிடைக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். இதனால் ரயில்களுக்கு எப்போதுமே தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வந்தே பாரத்
அதேநேரம் தொழில்நுட்ப ரீதியாக இந்திய ரயில்வே பின்தங்கியே இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தது. அதேபோல பெரும்பாலான ரயில்களில் போதிய வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் விடை தரும் வதையில், இந்திய ரயில்வே அட்டகாசமான வசதிகளைக் கொண்ட, வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியது. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட, இந்த ரயில்கள் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதிவேக ரயிலாகும். ஐசிஎஃப் தொழிற்சாலையில் வந்தே பாரத் தயாரிக்கப்படுகிறது.

மிக வரவேற்பு
இந்த வந்தே பாரத் ரயில்களுக்குப் பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் நாடு முழுக்க வந்தே பாரத் ரயில் சேவையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இப்போது நாடு முழுக்க மொத்தம் 11 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தேவை இருக்கும் வழித்தடங்களைக் கண்டறிந்து வந்தே பாரத் ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. சில மாதங்களில் நாடு முழுக்க 400 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதே இலக்காகும்.

சென்னை கோவை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இருந்து வருகிறது. இதனிடையே அடுத்தாக தமிழ்நாட்டில் இரண்டாவது வந்தே பாரத் ரயிலாகச் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதுவரை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் 16 பேட்டிகள் இருந்த நிலையில், சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் 8 பேட்டிகள் மட்டுமே இருக்கும். இதன் மூலம் 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் முதல் வந்தே பாரத் என்ற சிறப்பையும் இது பெறவுள்ளார்.

சோதனை
வரும் ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி இந்த வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டமும் சமீபத்தில் தான் நடந்தது. காலை 5.40 மணிக்குச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இருப்பினும், திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் வந்தே பாரத் ரயில்கள் 22 முன்னதாகவே கோவை வந்தடைந்தது. மீண்டும் அதே வழித்தடத்தில் ரயில் கிளம்பிச் சென்றது.

புதிய வழித்தடங்கள்
ஆனால், இந்த மாதம் இயக்கப்படவுள்ள ஒரே வந்தே பாரத் ரயில் இது இல்லை. ஏற்கனவே, கடந்த 1ஆம் தேதி பிரதமர் மோடி போபால் -டெல்லி இடையே வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார். இது நாட்டின் 11ஆவது வந்தே பாரத் ரயிலாகும். 12ஆவதாகச் சென்னை கோவை வந்தே பாரத் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 10ஆம் தேதி டெல்லி- ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

எங்கெல்லாம் வந்தே பாரத் ரயில்கள்
இது மட்டுமின்றி, ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கும் வந்தே பாரத் ரயில் இம்மாத இறுதிக்குள் இயக்கப்பட உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்களுக்கு இது பெரியளவில் உதவும். இந்த ரயில் செகந்திராபாத் ஸ்டேஷனில் இருந்து இயக்கப்படும் என தெரிகிறது. இது தவிர பாட்னாவில் இருந்து ராஞ்சி இடையேயும் வந்தே பாரத் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதாவது இந்த மாதம் சென்னை- கோவை மட்டுமின்றி மேலும் 4 வந்தே பாரத் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications