பொன் மாணிக்கவேலை ஒழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் தகர்க்கப்பட்டு விட்டது.. யானை ராஜேந்திரன்
ஐகோர்ட் தலையீட்டால் மட்டுமே இது சாத்தியம் என்று யானை ராஜேந்திரன் கூறியுள்ளார்
Recommended Video

சென்னை: "பொன். மாணிக்கவேலை ஒழித்து விட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் அரசு செயல்பட்டது. அதை தடுத்து விட்டது ஹைகோர்ட். இனி சுதந்திரமாக பொன் மாணிக்கவேல் செயல்படலாம்" என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் தமிழக மக்களே அதிர்ந்து போனார்கள்.
பொன்.மாணிக்கவேல் நன்றாகவே பணியாற்றி வரும் சூழலில் எதற்காக இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழ தொடங்கின.

ஆணை ரத்து
இந்த நேரத்தில்தான், சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு தமிழக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2 மாதங்களாக நடந்த இந்த வழக்கில் இன்று, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்தது கோர்ட். மேலும் ஒரு வருடத்திற்கு பணி நீட்டிப்பும் வழங்கி விட்டது.

யானை ராஜேந்திரன்
தமிழக அரசை எதிர்த்து மனு போட்டும், இன்று அந்த வழக்கில் திறன்பட வாதாடி வெற்றியும் வாங்கி கொடுத்துள்ளார் யானை ராஜேந்திரன். இன்று பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு இவர்தான் முழு முதற் காரணம். இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யானை ராஜேந்திரன் சொன்னதாவது:

ஹைகோர்ட் தடுத்துள்ளது
"இந்த வழக்கில் ஏகப்பட்ட அதிகாரிகள் மாட்டியுள்ளனர். இதனால்தான் கெட்ட எண்ணத்துடன் பொன் மாணிக்கவேலை தூக்க முயன்றனர். ஆனால் அதை ஹைகோர்ட் தடுத்துள்ளது.

நெருக்குதல்
உதாரணத்திற்கு கவிதா என்ற அதிகாரியைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகின்றனர். அவருக்கு எப்படியும் ஜாமீன் வாங்க வேண்டும். கவிதா பெரிய இடத்தைச் சேர்ந்தவர். அவருக்காக பேசி அரசியல் தரப்பிலிருந்து நிறைய நெருக்குதல் வருகிறது.

விஸ்வரூபம்
எனவே எப்படியாவது ஜாமீன் வாங்கித் தருமாறு ஒரு ஏடிஜிபி அரசு தலைமை வக்கீலுக்குப் போன் செய்து கூறுகிறார். ஒரு சாதாரண அரசு வக்கீலிடம் ஏடிஜிபி பேசுகிறார் என்றால் எந்த அளவுக்கு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆடியோ இருக்கு
அந்த ஏடிஜிபி பேசிய பேச்சின் ஆடியோ என்னிடம் உள்ளது. அவர் வேண்டுமானால் வழக்கு போடட்டும், நான் பேசிக்கிறேன். அதுவும் இன்னொரு அதிகாரியின் போனை வாங்கி அந்த ஏடிஜிபி பேசினார். அந்த அதிகாரியையும் இந்த ஏடிஜிபி மாட்டி விட்டுள்ளார்.

பதில் சொல்ல தேவையில்லை
ஹைகோர்ட் தலையிட்டதால் பொன் மாணிக்கவேல் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் கெட்ட எண்ணம் தடுக்கப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து தனது நியாயமான செயலை பொன் மாணிக்கவேல் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி அவர் ஹைகோர்ட்டுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும். வேறு யாருக்கும் அவர் பதில் சொல்ல வேண்டியதில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications