விஐபி வருகிறார்.. நடிகர் ரஜினிகாந்திற்காக நேற்று மாலையே ரெடியான அப்பல்லோ மருத்துவமனை?
சென்னை: ரஜினிகாந்திற்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு இல்லை என்றும் மருத்துவர்களிடம் முன்கூட்டியே கலந்து ஆலோசித்து அதன் பிறகே அவர் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ரஜினியும் உற்சாகத்துடன் இந்த படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். தற்போது விசாகப்பட்டினத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்திற்கு இன்று காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மூன்று விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் சொல்கின்றன.
ரஜினிகாந்திற்கு உணவு செரிமான பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். ரஜினிகாந்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது நேற்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
ஏனெனில் கூலி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்த போது அவரது அடி வயிற்றில் லேசான வலி இருந்ததாகவும் இதனால், மருத்துவரை கலந்து ஆலோசித்த பிறகே அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், நேற்று மாலையே அப்பல்லோ மருத்துவமனையில் விஐபி ஒருவர் சிகிச்சைக்காக வர இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பரிசோதனைகள் முடிந்த பிறகு ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. செரிமான பிரச்சினைக்கு என்ன காரணம் என்றும் அடி வயிற்றில் சிறிய வீக்கம் ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு உரிய சிகிச்சைக்கு பின்னர் நாளைய தினம் அல்லது இன்றைய தினம் கூட ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்தும், அவருக்கு உடல் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பது பற்றியும், டிஸ்சார்ஜ் எப்போது? என்பது குறித்த தகவல்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்பல்லோ மருத்துவமனை வெளியிடும் என்று தெரிகிறது.
எந்திரன் பட ரிலீஸ் சமயத்திலும் ரஜினிகாந்திற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்ற ரஜினிகாந்த் பல மாதங்கள் சிகிச்சை பெற்று பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் விரைவில் உடல் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications