அன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம் என அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 75 நாள்களுக்கு பிறகு 2016ம்ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மாரடைப்பால் காலமனார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்து இரண்டு மாதத்தில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக இன்றைய துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் அன்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது ஒ பன்னீர்செல்வம் துணை முதல்வரான போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பட்டது. இந்த ஆணையம் அப்போலா மருத்துவர்கள் ஜெயலலிதா மரண விவகாரத்தில் எதையோ மறைக்கப் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, "முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நல்ல சிகிச்சை அளித்து அப்பலோ மருத்துவமனை காப்பாற்றியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம். உலக தரம் வாய்ந்த சிறந்த மருத்துவர்கள் அப்பலோ மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தங்களை விசாரணைக்கு அழைத்தபோது ஆணையத்தில் மருத்துவர் குழு இல்லாததை ஏற்க முடியவில்லை என்று கூறினோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கினால் , ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்" இவ்வாறு கூறினார்.