கையை விட மாட்டேன்! கனடா செல்லும் அப்பாவு.. வழியனுப்ப வந்த பேத்தி.. விமான நிலையத்தில் பாசப்போராட்டம்
சென்னை: காமன்வெல்த் நாடுகளுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கனடா செல்கிறார்.
Recommended Video
கனடா செல்லும் அப்பாவுவை அவரது பேத்தி கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளன.
ஒருவார அரசு முறை பயணமாக கனடா செல்லும் அப்பாவு உடன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செல்கின்றனர்.
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆக.22 முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் பிரதிநிதியாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் நடைபெறும் சொசைட்டி ஆஃப் கிளர்க்ஸ் அட் த டேபிள் (எஸ்ஓசிஏடிடி) கூட்டங்களில் பேரவை செயலர் கி.சீனிவாசன் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பேரவைத் தலைவர், செயலர் ஆகியோர் 18-ம் தேதி (நேற்று) இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் செல்கின்றனர்.
அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு பிறகு, ஹாலிபேக்ஸ் நகர் சென்றடைகின்றனர். மாநாடு முடிந்த பின்னர் இவர்கள் செப்டம்பர் 1-ம் தேதி சென்னை திரும்புகின்றனர். இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு அறைக்கு சென்று அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து நேற்று இரவு அப்பாவு சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் அவரது பேத்தியுடன் உறவினர் வழியனுப்ப வந்தனர்.
அப்போது பேத்தி அப்பாவுவை போகவிடாமல் அடம்பிடித்துள்ளார். பேத்திகளுக்கும் தாத்தாக்களுக்கும் உள்ள பந்தம் என்பது எப்போதும் இனிமையானதாகும். தாத்தாக்கள் எப்போதும் தனது மகள்/மகன்களிடம் இருப்பதை போல பேரக்குழந்தைகளிடம் இருப்பதில்லைதானே! அதை உறுதிப்படுத்தும் விதமாக அப்பாவுவின் பேத்தி தாத்தாவை வழியனுப்பாமல் அடம்பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த செல்ல பிடிவாதத்திலிருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் அப்பாவு சிறிது நேரம் தவித்துள்ளார்.
பின்னர் ஒருவழியாக பேத்தியை மகளிடம் சேர்த்துவிட்டு அங்கிருந்து விமான நிலையத்திற்குள் புறப்பட்டு சென்றுள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற தேசியளவிலான சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு வேண்டும் எனக் கூறி கவனம் ஈர்த்தார். தற்போது இதனைத் தொடர்ந்து அப்பாவு கனடா பயணம் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.