சட்டசபையில் துரைமுருகன் இருந்தாலே மாஸ்தான்.. முதல் பேச்சிலேயே அப்பாவுவை சிரிக்க வச்சுட்டாரே!
சென்னை: சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட அப்பாவுவை வாழ்த்தி பேசிய அவை முன்னவர் துரைமுருகன் தனது முதல் பேச்சிலேயே அப்பாவுவை சிரிக்க வைத்துவிட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 12 ஆம் தேதி தமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக கு பிச்சாண்டியும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடரில் சபாநாயகர், துணை சபாநாயகர் குறித்து அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பேசினர்.
அப்போது திமுக சார்பில் அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன் பேசினார். அவர் எப்போது பேசினாலும் அவையில் சிரிப்பலை எழும்.
புதுச்சேரி -கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதா..? பாஜகவுக்கு துரைமுருகன் கண்டனம்..!
பேரவைத் துணைத் தலைவர்
அவர் பேசுகையில் பேரவைத் தலைவரையும் பேரவைத் துணைத் தலைவரையும் இந்த மாமன்றத்தில் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்ய ஒப்புக் கொண்ட எதிர்க்கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேரவைத் தலைவர் அவர்களே இந்த ஆசனத்தில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். 1919 இலிருந்து இந்த மாமன்றம் செயல்பட்டு வருகிறது.
சட்டசபை
அவர்கள் தந்த ஆசனத்தில்தான் இன்று நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த 100 ஆண்டு காலத்தில் எத்தனை பெரியவர்கள் இந்த ஆசனத்திலே அமர்ந்திருக்கிறார்கள். நான் இந்த சட்டமன்றத்திற்கு வந்ததிலிருந்து மதியழகன், சீனிவாசன், புலவர் கோவிந்தன், கே ராஜாராம், பிஎச் பாண்டியன், தமிழ் குடிமகன், முத்தையா, பிடிஆர் பழனிவேல் ராஜன், காளிமுத்து, ஆவுடையப்பன், டி ஜெயக்குமார், தனபால் ஆகியோரை சட்டசபை தலைவர்களாக நான் பார்த்துள்ளேன்.
நன்றி
அவை முன்னவர் பொறுப்பை எனக்கு முதல்வர் அளித்த காரணத்தால் தங்களை இருக்கையில் அமர வைக்கிற அருமையான வாய்ப்பை எனக்கு தந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சபையில் எவ்வளவோ அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் யார் இருந்தார்கள், யார் போனார்கள் என்று தெரியாது.
சபாநாயகர்
இரண்டு பேருக்கு மட்டும் தான் வரலாறு உண்டு. ஒன்று யார் யார் முதல்வராக இருந்தார்களோ அவர்களின் பெயர்கள் இந்த மாமன்றத்தின் அலுவலகத்தின் முன் எழுதப்பட்டிருக்கும். அது போல் யார் யார் சபாநாயகராக இருந்தார்கள் என்பது குறித்த படங்களும் பெயர்களும் இங்கு வைக்கப்பட்டிருக்கும். ஆகவே நாங்கள் அமைச்சராக இருந்தாலும் நாளை ஊர் பேர் தெரியாமல் போகலாம். ஆனால் உங்களுக்கு என்றைக்கும் பெயர் இருக்கும், புகழ் இருக்கும், படம் இருக்கும், எல்லாரும் உங்களை பார்ப்பார்கள். இந்த நல்வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என தெரிவித்தார். இதை கேட்டவுடன் அப்பாவு சிரித்தார்.