அப்பாவு சபாநாயகர்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த முதல்வர் முக ஸ்டாலின்.. பலே முடிவுதான்!
சென்னை: திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அப்பாவுவை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக நியமித்து அதற்கு முதல்வர் முக ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதுவும் எப்படி, யாரை சட்டசபைக்கு நுழையவிடாமல் ஐந்து வருடங்களாக தடுத்தார்களோ அவரையே சபாநாயகராக்கி அழகு பார்த்துள்ளார் ஸ்டாலின்
Recommended Video
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்று திமுக ஆட்சியமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றது முதல்., தலைமை செயலாளர் நியமனம். முதலமைச்சரின் செயலாளர்கள் நியமனம், காவல்துறை அதிகாரிகள் நியமனம் வரை அனைத்துமே மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சயர்யத்துடன் பார்க்கப்படுகிறது.
முற்றுப்புள்ளி
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அப்பாவுவை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக நியமித்து அதற்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதுவும் எப்படி யாரை சட்டசபைக்கு நுழையவிடாமல் ஐந்து வருடங்களாக தடுத்தார்களோ அவரையே சட்டப்பேரவைக்கு சபாநாயகராக்கி அழகு பார்த்துள்ளார் ஸ்டாலின்
16வது சபாநாயகர்
2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி முடிவுகள் தொடர்பான வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த முறை ராதாபுரம் தொகுதியில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளார். இப்போது தமிழக சட்டசபையில் 16-வது சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
44 வாக்கில் தோற்றவர்
2001 சுயேட்சையாக ராதாபுரத்தில் வெற்றி பெற்ற அப்பாவு 2006-ல் திமுகவில் இணைந்தார். 2006-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களம் இறங்கி வெற்றி பெற்றார். 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதி கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்-க்கு ஒதுக்கப்பட்டது. கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ்க்காக வேலை செய்தார். கட்சி அந்தத் தொகுதியைக் கூட்டணி கட்சிக்கு ஒதுக்க முடிவுசெய்ததும் அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அதை ஏற்றுக்கொண்டு தேர்தல் பணிகளைச் செய்ததால் கருணாநிதியிடம் நன்மதிப்பை பெற்றார். . அந்த தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றது. அடுத்து 2016 தேர்தலில் அப்பாவு அவர்களுக்கு ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் கருணாநிதி. அங்கு போட்டியிட்ட அப்பாவு வெறும் 44 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
தோல்வி எப்படி
ராதாபுரம் தொகுதியில் 2016 தேர்தலில் மொத்தம் 1508 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில், அப்பாவு 863 வாக்குகளும், இன்பதுரை 200 வாக்குகளும் பெற்றனர். இதில் அப்பாவு பெற்ற தபால் வாக்குகளில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கியிருந்ததால் 203 தபால் வாக்குகள் செல்லாது என்றும் ஒரே பள்ளியின் தலைமை ஆசிரியரே கையெழுத்திட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனறும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் அளிக்கும் தகுதி உடையவர் அல்ல என்றும் அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் அலுவலரும் அப்பாவு பெற்ற 203 வாக்குகளையும் சேர்த்து மொத்தம் 300 வாக்குகளைச் செல்லாது என அறிவித்தார். இதனால் 44 வாக்கில் தோற்ற அப்பாவு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தினார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று வரை நிலுவையில் உள்ளது. அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் இன்று வரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த முறை இன்பதுரையை விட 4,492 வாக்குகள் அதிகம் பெற்று அப்பாவு ராதபுரத்தில் வெற்றியடைந்திருக்கிறார்.
அதிக அனுபவம்
வெற்றிக்கோட்ட நெருங்கியும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டசபையில் நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட அப்பாவு இப்போது அதே சட்டப்பேரவைக்கு தலைவராக்கி உள்ளார் முக ஸ்டாலின். விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தது என பல போராட்டங்களில் பங்கேற்ற அப்பாவு. சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அதிக அனுபவம் உள்ளவர் என்பதால் சபாநாயகர் ஆக்கப்பட்டுள்ளார்.,
அப்பாவுக்கு அழகு
அஜித்தின் விவேகம் படத்தில் வரும் டயலாக், "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட... தோத்துட்ட...ன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது.. நெவர்கிவ்அப்" என்று கூறுவார். அதுதான் இன்றைக்கு அப்பாவுக்கு நடந்திருக்கிறது. சட்டசபையில் நுழைய கடுமையாக போராடியவர், இப்போது சட்டசபைக்கு தலைவராகி (சபாநாயகராகி ) உள்ளார். அப்பாவுவை சபாநாயகராக்கியதன் மூலம் முக ஸ்டாலின் மாற்று அரசியல் கட்சியினரையும் சொந்த கட்சியினரையும் வாயடைக்க வைத்துள்ளார்.