ஸ்தம்பித்த சென்னை! ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சிக்கு புது சிக்கல்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி ஆர்டர்! என்ன
சென்னை: சென்னையில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் டிஜிபி சங்கர் ஜிவால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இந்தியா உள்பட வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் ஏஆர்ரஹ்மானின் கான்சர்ட் கடந்த மாதம் 12ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் மழை பெய்தது. இதனால் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அன்று ஒத்திவைக்கப்பட்ட இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானவர்கள் பனையூர் வந்தனர்.
எப்போதுமே டிக்கெட்டுகளின் விலைக்கு ஏற்ப இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் இருக்கைகள் சரியாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பலரும் இருக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பலரும் கோபத்தை வெளிக்காட்டி நிகழ்ச்சியை விமர்சித்தனர். அதோடு பலரும் இருக்கை கிடைக்காத அதிருப்தியில் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றனர்.
இந்த நிகழ்ச்சி காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் என்பது இரவு வரை நீடித்தது. முதல்வர் ஸ்டாலினின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. அதோடு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சிரமத்துக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் விடாத ரசிகர்கள் ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சியை வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க போலீசாரும் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதோடு அடுத்து எடுக்க உள்ள நடவடிக்கை பற்றியும் அவர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி சங்கர் ஜிவால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தற்போது நடந்த இந்த சம்பவம் என்பது தாம்பரம் போலீஸ் லிமிட்டில் வருகிறது. இதனால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணையின்போது சில முக்கிய விஷயங்களை போலீஸ் கவனத்தில் கொள்ள உள்ளது. அதாவது மிகப்பெரிய நிகழ்ச்சி நடக்கும்போது உள்ளாட்சி அமைப்பு, மின்வாரியம், மெடிக்கல் எமர்ஜென்சி சார்ந்த துறைகளிடம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாகும்.
இதனால் அந்த துறைகளிலும் அனுமதி பெற்றார்களா? என்பது பற்றி விசாரிக்க உள்ளோம். மேலும் இது ஒரு இன்டோர் நிகழ்ச்சி. இதனால் போலீஸ் பாதுகாப்பு என்பது தேவையில்லை. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதோடு ஏற்கனவே டிக்கெட் விற்பனை முடிந்ததும், அதன்பிறகும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் பற்றியும் விசாரணை மேற்கொள்கிறோம்.
அதோடு நிகழ்ச்சி டிக்கெட் வழங்கும் வழிமுறைகள் என்ன? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளோம். தற்போதைய சம்பவதிற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும். இதனால் நிகழ்ச்சியை சார்ந்தவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். Show Cause நோட்டீஸ் வழங்கி அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications