ரசிகர்களால் மறக்கவே முடியாத ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி.. கடும் கோபம்
சென்னை: ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரிக்கு பல ஆயிரங்கள் கொடுத்து டிக்கெட் வாங்கியும் உட்கார கூட இடம் கிடைக்காமல் கடும் நெரிசலில் சிக்கி உயிர் பிழைத்தால் போதும் என்று திரும்பியிருக்கின்றனர் ரசிகர்கள். மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி மறக்கவே முடியாத அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் என்ற பகுதியில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் அவருடைய இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது. மழை காரணமாக அந்த இசைக்கச்சேரி தள்ளி வைக்கப்பட்டது.

அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்த ஏஆர் ரகுமான், "எனது அன்பான நண்பர்களே, வானிலை மோசமாக இருப்பதினாலும், தொடர் மழையின் காரணமாகவும், எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்தும், அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படியும் இன்று நடக்கவிருந்த இசை கச்சேரி வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் நமது உடல் நலமே முக்கியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் இசைக்கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. எந்த ஒரு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. பார்க்கிங் வசதியில்லை. சேர் வசதியில்லாமல் பல ரசிகர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல மணி நேரம் க்யூவில் நிற்க வேண்டியதாகிவிட்டது.

ரூ.15 ஆயிரம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி மறக்கவே முடியாத அளவிற்கு ஆகி விட்டது ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி என்று ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி சரியாக இசைக்கச்சேரியை கேட்க முடியவில்லை என்று கதறிய ரசிகர்கள் ஒரு கட்டத்தில் வால்யூம் வேண்டும் என்று கூற கத்த ஆரம்பித்து விட்டனர். சவுண்ட் சிஸ்டம் சரியில்லை என்று பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினர்.
பல ரசிகர்களால் கச்சேரி நடைபெறும் இடத்திற்குள் போக முடியவில்லை என்று கூறி உயிர் பிழைத்தால் போதும் என்று சொல்லி வீடு திரும்ப ஆரம்பித்தனர். என் குழந்தைகளின் மூச்சே நின்று போயிருக்கும் எந்த வித பாதுகாப்பு வசதியோ, சரியானா ஏற்பாடுகளோ செய்யவில்லை என்பது ரசிகர்களின் மனக்குமுறல். ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறிய ஏஆர் ரகுமான் இதனை கவனிப்பாரா?












Click it and Unblock the Notifications