அரக்கோணம் டூ சென்னை ரூட்டில் ஏசி ரயில் ரெடி.. டிக்கெட் விலை என்ன? எப்போது ஓடும்?
சென்னை: சென்னையில் இரண்டாவது ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.. இந்த நவீன ரயில் சேவை மற்றும் அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.. இந்த இரண்டாவது ஏசி ரயிலை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில் அதுகுறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் அன்றாடப் போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முதுகெலும்பாக விளங்குகின்றன..

அரக்கோணம் டூ சென்னை
இப்போது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மட்டும் ஒரே ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சென்னையின் இரண்டாவது ஏசி மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளைச் செய்துள்ளது..
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பெரம்பூர் ஐ.சி.எப்-ல் இருந்து பெறப்பட்ட புதிய ஏசி ரயில் பெட்டிகள் தற்போது சென்னை கோட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; தேவையான தொழில்நுட்பச் சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அனுமதிக்குப் பின் இவை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்று துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது..
ICF தயாரிப்பு & வசதிகள்
இந்த புதிய ஏசி மின்சார ரயில் பெட்டிகள் சென்னையின் பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் அதாவது ICF-ல் தயாரிக்கப்பட்டுள்ளன.. மொத்தம் 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், பயணிகள் பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. தானியங்கி கதவுகள், ரயிலுக்குள் வெப்பநிலை சீராக இருக்க உயர்தர ஏசி இயந்திரங்கள் மற்றும் எமர்ஜென்சி டாக்-பேக் சிஸ்டம் போன்ற வசதிகள் இதில் அடங்கும்.. ஏற்கனவே ஐ.சி.எப்-ல் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, மேலதிக சோதனை ஓட்டங்களுக்காக சென்னை ரயில்வே கோட்டத்திடம் பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன..
சோதனை ஓட்டம், என்னென்ன ரூட்
இந்த 2வது ஏசி ரயிலை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.. இதற்கான மிக முக்கியமான சோதனை ஓட்டம் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி அன்று ஆவடி மற்றும் அரக்கோணம் இடையே 90 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது..
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே ஒரு ரயில் இருப்பதால், இந்த புதிய ரயிலை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் அல்லது சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் ஒன்றில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது..
குறிப்பாக, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் வசதி இல்லாததாலும், நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் அதிகம் என்பதாலும், இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளன..
அறிமுகம் மற்றும் கால அட்டவணை
இந்த புதிய ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடம் அதிகரித்துள்ளது.. தற்போதைய நிலவரப்படி, மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் என ஒரு சிறு ஹிண்ட் கிடைத்துள்ளது.
மேலும், அலுவலகம் செல்லும் பயணிகளுக்கு உதவும் வகையில் காலை மற்றும் மாலை ஆகிய 'பீக் ஹவர்' (Peak Hours) நேரங்களில் இந்த ரயிலை இயக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.. இதற்கு முன்னதாக, சென்னையில் முதல் ஏசி ரயில் சேவை 2023-ம் வருஷம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
கட்டண விவரங்கள் & சவால்கள்
முதல் ஏசி ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே உள்ளது.. ஒரு நாளைக்கு சுமார் 40,000 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட போதிலும், இப்போதைய நிலையில் சுமார் 2,800 பயணிகள் மட்டுமே இதைப் பயன்படுத்துகிறார்கள்.. இதற்கு அதிகப்படியான கட்டணம் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.. அதனால் புதிய ரயிலை தொடங்கும்போது டிக்கெட் விலையைக் குறைப்பது மற்றும் கால அட்டவணையைச் சீரமைப்பது குறித்து தெற்கு ரயில்வே சிந்தித்து வருகிறது.
தற்போது 10 கி.மீ தூரத்திற்கு குறைந்தபட்சக் கட்டணமாக 35 ரூபாயும், 60 கி.மீ தூரத்திற்கு 105 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது..
பயணிகளின் எதிர்பார்ப்பு
பீச் - வேளச்சேரி (MRTS) ரூட்டில் உள்ள சில ரயில் நிலையங்கள் 9 பெட்டிகள் மட்டுமே நிற்கும் வகையில் அமைந்துள்ளதால், அங்கு 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறதாம். இதனால் புறநகர் மக்கள் அதிகம் பயணிக்கும் சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும்போது, கோடைக் கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க இது பெரும் உதவியாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறார்கள்.
அனைத்துப் பாதுகாப்பு சோதனைகளும் முடிவடைந்துள்ள நிலையில், இதற்கான முறையான கால அட்டவணை இன்னும் சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது..!!!












Click it and Unblock the Notifications