ஒசூர் சிப்காட்டில் கே சி வீரமணி செய்த மிகப் பெரிய மோசடி.. அதிர வைக்கும் பின்னணி!.. என்ன புகார்?
சென்னை: ஒசூரில் சிப்காட்டில் பல கோடி மதிப்பிலான நிலத்தை ஆண்டுக்கு வெறும் ரூ 1 வீதம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு முன்னாள் அமைச்சர் வீரமணியின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதை முக்கிய குற்றச்சாட்டாக அறப்போர் இயக்கம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
Recommended Video
அதிமுக ஆட்சியில் 2016 - 2021 ஆம் ஆண்டு காலத்தில் வணிக வரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் மீது அறப்போர் இயக்கத்தினர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி 2011 முதல் 2021 வரையில் பொது ஊழியராகவும் சட்டசபை உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளார். இதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்துள்ளோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் ரெய்டால் பரபரப்பு.. சொத்து குவிப்பு வழக்கு பதிவு!
ஜோலார்பேட்டை எம்எல்ஏ
2011 முதல் 2021 வரையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.சி.வீரமணி, 2016 முதல் 2021 வரையில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். அதற்கு முன்னதாக 2013 முதல் 2016 வரையில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, தமிழ்மொழி, கலாசாரம் மற்றும் சுகாதாரத்துறை போன்ற துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.
7 கோடி
2011 ஆம் ஆண்டு கே.சி.வீரமணிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள நிகர சொத்து என்பது 7.48 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2011 முதல் 2021 வரையில் அவர் மற்றும் அவரது குடும்பத்தார் சேர்த்துள்ள சொத்து மதிப்பு என்பது 91.2 கோடி ரூபாய் ஆகும். 2011 முதல் 2021 வரையில் அவர் வாங்கிய கடன்களைக் கழித்தால், அவர் சேர்த்த நிகர சொத்து 83.65 கோடி ரூபாய் ஆகும். கடந்த பத்து ஆண்டு காலத்தில் அவரது வருமானம் மூலம் சேமித்தது என்பது அதிகபட்சமாக 7 கோடி ரூபாய்தான்.
வருமானத்திற்கு அதிகம்
கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.65 கோடி ரூபாய் ஆகும். இந்த சொத்து மதிப்பை கணக்கிடும்போது பெரும்பாலும் அவர் சொத்தை வாங்கிய விலையாக பதிவுத்துறையில் தெரிவித்திருந்ததையே நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளோம். பெரும்பாலும் இவை அப்போதைய அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பைவிட மிகக் குறைவாக காட்டப்பட்டுள்ளது.
அதிகாரிகள்
இவரே பதிவுத்துறை அமைச்சராகவும் இருந்து இவர் துறையிலேயே அதிகாரிகளுடன் சேர்ந்து விலையை குறைத்து மதிப்பீடு செய்து மோசடியும் செய்துள்ளார். எனவே, விசாரணையில் இந்த சொத்துகளின் உண்மையான வாங்கிய விலையை கணக்கீடு செய்தால் இங்கு சொல்லப்பட்ட தொகையைவிட அது பல கோடி ரூபாய் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது. அவை அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையின்போது கணக்கிட வேண்டும்.
அசையும் சொத்து
மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயரில் உள்ள அசையும் சொத்து மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 43 கோடி ரூபாய் அதிகமாகியுள்ளது. அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் பல ஆசையா சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. பெங்களூர், சென்னை, திருப்பத்தூர் என்று பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்துக்களை வாங்கியுள்ளார்" என மனுவில் குறிப்பிட்டுள்ளனர் அறப்போர் இயக்கத்தினர்.
பங்குதாரர்
ஒசூர் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்துக்கு வெறும் 1 ரூபாய் குத்தகை என்ற அடிப்படையில் வீரமணி நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 100 ரூபாய்க்கு 0.1 ஏக்கர் நிலம் வீரமணியின் நிறுவனமான ஹோம் டிசைனர்ஸ் அண்ட் ஃபேப்ரிகேட்டர் கம்பெனிக்கு 2017 ஆம் ஆண்டு சிப்காட்டால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் 15 கோடி ரூபாய் செலவில் ஹோட்டல் ஹோசூர் ஹில்ஸ்' கட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் அவர் 64 சதவீத பங்குதாரராகவும் உள்ளார்.
80 லட்சம் மதிப்பு
இவரது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலத்தின் மதிப்பை 80 லட்சம் என கணக்கு காட்டியுள்ளார். இதன் மதிப்பு 2 கோடியாகும். ஆனால் இதே நிலத்தின் ஆவணத்தை வங்கியில் வைத்து ரூ 15 கோடி கடன் வாங்கியுள்ளார். அது போல் தனது தாய் மணியம்மாள், சகோதரி சுதா சுசீலா ஆகியோர பெயரில் நிலங்களை வாங்கி அதை அதே நாளிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ தன் பெயருக்கு முறைகேடாக பதிவு செய்துள்ளார் என தனது புகாரில் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.