"சான்ஸே இல்லை".. அறையில் உறுதியாக சொன்ன எடப்பாடி! மனசை விட்ட ஓபிஎஸ்? அதிமுகவில் இனி இதுதான் நடக்கும்
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் இடையே தீவிர மோதல் நிலவும் நிலையில் அதிமுகவில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வென்றார். ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
4800 கோடியாமே.. சீனில் வந்த எடப்பாடி மகன்.. திமுகவுடன்
ஓபிஎஸ் என்ன சொன்னார்
இந்த தீர்ப்பை பயன்படுத்தி அதிமுகவில் எல்லோரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் பயணித்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது. அதிமுக எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றுபட்ட போது அதை வீழ்த்த இயலவில்லை என்பது நிரூபணம். நாம் ஒன்றாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். அப்படி இல்லாமல் போனதால்தான் திமுக வென்றது. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். கடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட விரும்புகிறார்கள். அதிமுகவில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அதிமுக ஒன்றுபடுவதே அனைவரது விருப்பமாக இருக்கிறது, என்று கூறினார்.
எடப்பாடி
ஆனால் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துடன் சேர வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி நேற்று செய்தியாளர்சந்திப்பில் கூறிவிட்டார். ஓ பன்னீர்செல்வம் தனக்கு தேவை என்றால் சேரலாம் என்பார். தனக்கு தேவை இல்லை என்றால் தர்ம தர்ம யுத்தம் செய்வார். அவரை நம்ப முடியாது. அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். ஓ பன்னீர்செல்வம் சமாதானத்திற்கு அழைத்ததும் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரின் ஆலோசனை அறையில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது.
உறுதியாக சொன்னார்
அதாவது மேல்முறையீடு செய்யலாமா அல்லது ஓ பன்னீர்செல்வத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாமா என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது. அப்போது சமாதானம் என்ற பேச்சுக்கே சான்ஸ் இல்லை. அவர் எல்லை மீறிவிட்டார். அவருக்குத்தான் ஆதரவே இல்லையே. அவரிடம் நாம் ஏன் சமாதானமாக செல்ல வேண்டும். அவரை ஒதுக்கினால் எத்தனை பேர் அவர் பின்னாடி செல்வார்கள். நாம் மேல்முறையீடு செய்வோம் என்று எடப்பாடி உறுதியாக சொல்லி இருக்கிறாராம்.
ஓபிஎஸ்
தன்னுடைய அழைப்பை எடப்பாடி தரப்பில் யாரும் ஏற்கவில்லை. சமாதான பேச்சுக்காக யாரும் வரவில்லை என்ற விரக்தி ஓ பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்பான விவரங்களை அதிமுகவிற்கு நெருக்கமான தலைவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக இரண்டு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அதில் கேவியட் போட்டுவிட்டார்.
கேவியட்
இந்த வழக்கு விசாரணை தொடங்க எப்படியும் ஒரு வாரமாவது ஆகும். அதில் முதலில் ஒற்றை நீதிபதி தீர்ப்பிற்கு ஸ்டே வாங்க முயல்வார்கள். இதன் மூலம் எடப்பாடி மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராக வழக்கு நடக்கும் வரை இருக்க முடியும். இப்படி ஸ்டே வாங்கிய பின்பே வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் பொதுக்குழுவை கூட்டியது சரி என்று வாதிட எடப்பாடி முயல்வார் என்று கூறப்படுகிறது.
வழக்கறிஞர்
இந்த முறை எடப்பாடி பழனிசாமி தனது லீகல் டீமில் டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரையும் , பெங்களூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரையும் ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள். வாதிட போகும் வழக்கறிஞர்கள் மாற மாட்டார்கள். ஆனால் ஆலோசனை செய்ய சில முக்கிய வழக்கறிஞர்களை எடப்பாடி களமிறக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த முறை வழக்கு விசாரணை முன்பை விட சூடாக இருக்கும் என்கிறார்கள்.
ஓபிஎஸ்
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர்களை தன் பக்கம் இழுக்கும் விதமாக அவர் நிர்வாகிகளை அழைப்பார் என்று கூறப்படுகிறது. அதிமுக அலுவலக சாவி வழக்கில் தீர்ப்பு வந்ததும் ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கும் திட்டத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.