மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தில் விலை குறைவு.. வீரியம் இருக்கிறதா? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்
சென்னை: மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தில் விற்கப்படும் மருந்துகள் வீரியம் குறைவாக உள்ளதாக விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. மலிவு விலையில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இந்த மருந்தகத்தில், விற்கப்படும் மருந்துகளின் தரம் குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள்.
மக்களின் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம் திட்டத்தை தொடங்கியது. இந்த மருந்தகங்கள், நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் மருந்தகம்: ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தகங்களில் 1,600 க்கும் மேற்பட்ட மருந்துகள், ஒரு ரூபாய்க்கு சுவிதா சானிடரி நாப்கின்கள், 250 அறுவை சிகிச்சை சாதனங்கள் என அனைத்துமே மலிவு விலையில் கிடைக்கின்றன.
இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் மருந்து கடைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரிவு உறுதி பூண்டுள்ளது. பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களில் மருந்தகம் தொடங்கினால், ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
மருந்துகளில் வீரியம் இருக்கிறதா?: வெளிச்சந்தையில் 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் மருந்துகள், மக்கள் மருந்தகத்தில் ரூ. 400 முதல் 500 க்கு மட்டுமே விற்கப்படுகிறது. மலிவு விலை என்ற போதிலும் இந்த மக்கள் மருந்தகத்தில் விற்கப்படும் மருந்து வீரியம் மிக்கதா? என்பது தொடர்பான விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. காசி என்ற நெட்டிசன் ஒருவர், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தின் படத்தை பகிர்ந்து அரசின் சிறப்பான முன்னெடுப்பு. தொடர்ந்து நாட்கணக்கில் மருந்து தேவைப்படுவோர் மிகவும் பயன்பெறுவர். மிகச் சிக்கனமான விலையில் மருந்துகள்” என்று பதிவிட்டு இருந்தார்.
நெட்டிசன்கள் கருத்து: இவரது பதிவுக்கு கீழே பல நெட்டிசன்களும் இங்கே வாங்கிய மருந்துகள் போதிய வீரியம் மிக்கதாக இல்லை என்ற ரீதியில் பதிவிட்டு வருகிறார்கள். டோனி ஸ்டார்க் என்ற நெட்டிசன் கூறுகையில், "ஜெனரிக் மருந்துகளை மட்டுமே அவர்கள் விற்கிறார்கள்.. பிற அனைத்திற்கும் நீங்கள் வழக்கமான மெடிக்கல் ஷாப்பிற்கு தான் செல்ல வேண்டும். ஏற்கனவே பலரும் ஜெனரிக் மருந்துகளை விற்கிறார்கள். எனவே இது போலியான திட்டம் போல உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
பெரிய சம்பவம் ஆகிட்டு: அதேபோல எஸ்.எஸ் என்ற நெட்டிசன் கூறுகையில், 'ரொம்ப ரிஸ்க்கான மெடிசின். மருத்து தரம் ரொம்ப மட்டம். இங்கு சாப்பிட்டு பெரிய சம்பவம் ஆயிருச்சு வீட்ல’ என தனது ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.
ஆதன் என்ற நெட்டிசன், "மருத்துவர்கள் இங்கே பரிந்துரைப்பது இல்லை என்று கூறியுள்ளார். அவர் கூறும் போது, மருந்தின் செயல்திறன் மற்றும் தரநிலைகள் குறித்து கவலைகள் உள்ளதால், பல மருத்துவர்கள் இதைப் பரிந்துரைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மலிவு விலை: நல்லான் என்ற நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது:- பல வருடமாக generic medicines இந்த Jan Dhan மருந்தகங்களில் விலை மிக குறைவாக கிடைக்கிறதே! இது புதிதல்லவே! மேலும் இதில் கிடைக்கும் generic medicationனின் வீரியம் எப்படி வேலை செய்கிறது என்பதை அனுபவஸ்தர்கள் மூலம் தெரிந்துகொள்வது அவசியம்” என்று கூறியுள்ளார்.
நவீன் என்ற நெட்டிசன் கூறுகையில், "இங்கே விற்கப்படும் மருந்துகள் எதிர்பார்க்கும் அளவு வீரியத்துடன் இல்லை. அரசு மருத்துவமனையில் கிடைக்காத மருந்துகளையும் மலிவு விலையில் வாங்க விரும்புவர்களும் இங்கே வாங்கலாம். மற்றவர்கள் தவிர்த்து விடுவது நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications