போலி பத்திரம்.. அங்கீகாரமில்லாத 8,876 பத்திரங்கள் பதிவு? சிக்கிய புள்ளிகள்.. சிறப்பு தணிக்கை அதிரடி
சென்னை: அரசு மற்றும் நீதிமன்ற தடையை மீறி, பெரும்பாலான இடங்களில், பத்திரங்கள் பதிவாகி வருவதாக புகார் கிளம்பி உள்ளது.. இதுகுறித்து, சிறப்பு தணிக்கையில் தெரியவந்தது என்ன?
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனைக்கும், பத்திரப்பதிவுக்கும், சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2016ல் தடை விதித்தது... இதை உறுதி செய்வதற்காக, பதிவு சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் அரசாணையானது, கடந்த 2017ல் பிறப்பிக்கப்பட்டது..

பத்திரங்கள்: அதன்படி, நகர், ஊரமைப்பு துறை அங்கீகாரமில்லாத மனை பத்திரங்களை, சார் பதிவாளர்கள் பதிவு செய்யக்கூடாது. ஆனால், பெரும்பாலான இடங்களில், இந்த உத்தரவுக்கு மாறாக, சார் - பதிவாளர்கள் அங்கீகாரமில்லாத மனை பத்திரங்களை பதிவு செய்வதாக புகார்கள் எழுந்தன..
சமீபத்தில்கூட, மதுரை ஹைகோர்ட்டில், அங்கீகாரமில்லாத மனை பதிவு தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளின் கேள்விக்கு, பதில் அளித்த பதிவுத்துறை, "2016 தடைக்கு பிறகு, 30 ஆயிரம் மனை பத்திரங்கள் பதிவானது" என்று தெரிவித்திருந்தது.
நெல்லை மண்டலம்: இன்னமும்கூட, பெரும்பாலான பகுதிகளில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பத்திரங்கள் பதிவாவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில், நகர், ஊரமைப்பு துறை புகார் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில், மண்டல வாரியாக சிறப்பு தணிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவானது.. அதன்படி, சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் சிறப்பு தணிக்கையும் நடைபெற்றது.
இதில், நெல்லை மண்டலத்தில் மட்டும், 83 சார் பதிவாளர் அலுவலகங்களில், 8,876 பத்திரங்கள் விதிகளை மீறி பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.. இந்த பத்திரங்களை பதிவு செய்த சார் - பதிவாளர்கள், இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற விபரங்கள் அனைத்துமே தணிக்கையில் வெளிச்சத்துக்கு வந்தநிலையில், சம்பந்தப்பட்ட நபர்களை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டும்கூட, உயர் அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.
கடிவாளம்: அத்துடன், சிறப்பு தணிக்கையில் சிக்கிய பலர், இன்னமும் பணியில் தொடர்வதாகவும் சொல்கிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் மீண்டும் கோர்ட் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. நெல்லை மண்டலத்தில், அதிக பத்திரங்கள் விதிகளை மீறி பதிவானது குறித்து, அமைச்சர் மூர்த்தி விசாரணை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications