முக்கோண மாற்றங்கள்.. வேகம் அதிகரித்த எடப்பாடி பழனிசாமி.. திமுகவின் முஸ்லிம் ஓட்டு உடையுதா? பலே பாஜக
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அதிரடிகள் வேகம் எடுத்துள்ளன.. இது அதிமுக தொண்டர்களுக்கே உத்வேகத்தை தந்து வருகிறதாம்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அதிமுக 32 இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. இதில், 32 இடங்களிலுமே படுதோல்வி அடைந்தது.. அதிலும், தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.

இடைத்தேர்தல்: திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.. அதேபோல, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆகமொத்தம் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருந்தது அதிமுக.,. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை தந்தது..
கடந்த சட்டமன்ற தேர்தலைபோலவே, லோக்சபா தேர்தலிலும் பலவீனமான கூட்டணியை வைத்ததால்தான், அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டது. கடைசி நேரம்வரை, கூட்டணிக்குள் பாமக வரும் என்று நம்பிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென பாஜகவுடன் பாமக கூட்டணியில் இணைந்து, அதிமுகவுக்கே ஷாக் தந்திருந்தது.
அதேபோல, பலவீனமான கூட்டணியை சுட்டிக்காட்டி, தென்மாவட்ட அதிமுக தொண்டர்கள் சிலர் கொந்தளித்து வீடியோவை வெளியிட்டிருந்தார்கள்..
தோல்வி: "உயிரை கொடுத்து புரட்சித்தலைவர் வளர்த்த இயக்கம் இது.. இப்படிப்பட்ட இயக்கத்தையே அழிக்கிற சூழலுக்கு எல்லாரும் கொண்டுவந்திட்டீங்களே? கட்சி தொண்டர்கள் நாங்க எல்லாருமே கொதிச்சு போயிருக்கோம்.. இதுவரை 9 தேர்தலை சந்தித்து, தோல்வியையும் சந்திச்சாச்சு.. இந்த இயக்கம் நாசமா போச்சு.. நீங்க எல்லாரும் சேர்ந்து உடனே முடிவெடுங்கள்" என்று வீடியோவில் ஆதங்கத்தை கொட்டியிருந்தனர்.
அந்தவகையில் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுக மேலிடம், விறுவிறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.. நீண்ட காலத்துக்கு பிறகு, நிர்வாகிகளை நேரடியாக வரவழைத்து, அவர்களிடன் கருத்தை கேட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி..
பாமக கூட்டணி: அப்போதுதான், பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நிர்வாகிகள் சொல்லி வருகிறார்களாம்.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியிடம் தெரிவித்து வருகிறார்களாம்.
"நேற்றுமுன்தினம்கூட, சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நாகை, மயிலாடுதுறை நிர்வாகிகளிடம் பேசும்போது, "தொண்டர்கள் யாரும் துவண்டுவிட வேண்டாம். கூட்டணி குறித்து கவலை வேண்டாம். வலுவான கூட்டணியை அமைக்க தலைமை முடிவுசெய்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும்.
சிறுபான்மை ஓட்டுக்கள்: சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும். சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம். சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை தங்கள் பக்கம திருப்புவதற்கான முயற்சிகளை அதிமுகவினர் மேற்கொள்ள வேண்டும்" என்று அவர்களிடம் எடப்பாடி கேட்டுக் கொண்டாராம்.
அந்தவகையில், ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவின் சக்சஸுக்கு காரணம் அதன் வலிமையான கூட்டணி என்பதை மறுக்க முடியாது.. எனவேதான், வரப்போகும் தேர்தலில் வலிமையான கூட்டணி அமைப்பது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளாராம்.. அதேபோல, சிறுபான்மையினர் ஓட்டுக்களை பிரதானமாக பெறுவது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்து வருவதாக தெரிகிறது.
சிஏஏ விவகாரம்: எனினும், அதிமுகவுக்கு முழுமையான சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்குமா? என்பது விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் நம்மிடம் சொன்னதாவது:
"தற்போது லோக்சபா தேர்தலுக்கு, பிறகு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வேகம் கூடியிருக்கிறது.. திமுக அரசை சரமாரியாக விமர்சித்து வருவதும், கேள்வி எழுப்பி வருவதும், கண்டித்து போராட்டங்களை நடத்தி வருவதும், அதிமுகவின் தொண்டர்களுக்கு வேகத்தையும், எழுச்சியையும் தந்து வருகிறது.
எம்ஜிஆர்: எப்போதுமே, எந்த அளவுக்கு திமுக எதிர்ப்பு இருக்கிறதோ, அந்த அளவுக்கு எம்ஜிஆர் விசுவாசிகள், அதிமுகவுக்கான வாக்குகளை அள்ளி தருவார்கள்.. அதேபோல, இஸ்லாமிய மக்களில் அதிமுகவுக்கு, தீவிர எம்ஜிஆர் விசுவாசிகளும் ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.. ஆனால், இந்த ராஜ்யசபாவில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து அதிமுக அன்றே வாக்களித்திருந்தால், இந்த சட்டம் அப்போதே தோல்வி அடைந்திருக்குமே?
இன்று எம்ஜிஆர் சிஏஏ விவகாரம்தான் விவகாரத்தில், நாடாளுமன்றத்திலேயே அதிமுக ஆதரவு தந்திருந்ததுடன், சட்டமன்றத்திலும், இதுகுறித்து அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தாரே?
கூட்டணி உறவு: "தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்படுறாங்கனு சுட்டிக்காட்டுங்க. யாரு பாதிச்சிருக்கா? யாரும் பாதிக்கப்படவில்லை.. ஒரு இஸ்லாமியராவது இங்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? " என்று ஆவேசமாக கேட்டிருந்தாரே? எடப்பாடி பழனிசாமி. இப்போது பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டாலும், அதற்குரிய பலனை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியதற்கு காரணமே, "மேலிடத்திலிருந்து" வந்த உத்தரவுதான் என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் உட்பட பலரும் கூறியிருந்தனர்..
சிறுபான்மையினர்: அந்தவகையில், அதிமுக - பாஜக இடையே மறைமுக உறவு உள்ளதாக இன்னமும் திமுக கூட்டணி வலுவாக நம்புகிறது.. கூட்டணியை முறித்து ஒருவருடத்துக்கு மேலாகியும், இதுபோன்ற வாதத்தை உடைக்க வேண்டியிருக்கிறது.. எனவே, சிறுபான்மையினர் ஓட்டுக்களை அள்ள வேண்டுமானால், அதிமுக தன்னை இன்னும் மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு சில காலம் ஆகலாம்.
அதேபோல, திமுகவை தோற்கடிக்க கட்சிகள் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கட்சிகள் மத்தியில் தலைதூக்கியிருக்கிறது.. இதற்கான ஒரு முயற்சியாகவும் இந்த விக்கிரவாண்டி தேர்தலை பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது. இத்தனைக்கும் கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
சிதறிய ஓட்டுக்கள்: அதிமுகவை சேர்ந்தவர்கள் பலரும், பாமக, பாஜக கூட்டணியில் இருப்பதால் அக்கட்சிக்கு வாக்களிக்காமல் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.. இடைநிலைச் சாதிகளை சார்ந்தவர்களும், பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக திமுகவுக்கே வாக்களித்துள்ளார்கள்.. நாம் தமிழர் கட்சியினரும் இந்த முறை அதிக ஓட்டுக்களை பிரித்திருக்கிறார்கள்.. அந்தவகையில் அதிமுகவின் ஓட்டுக்கள் சிதறி வருவதையும் அக்கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications