அலறவிடும் அண்ணாமலை.. "அவரும்" இங்கே வர்றாரா? ஊசலாடும் கட்சிகள்.. எடப்பாடியை சூழும் வலைகள்.. அட பாஜக
சென்னை: அதிமுக பற்றி பேச்சையே எடுக்காமல் உள்ளது தமிழக பாஜக.. அப்படியானால், தனித்து போட்டியிட போகிறதா? அப்படி போட்டியிட்டால், யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
வரும் எம்பி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.. திமுக கூட்டணியை பொறுத்தவரை, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் மறுபடியும் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டன..

அதிமுகவை பொறுத்தவரை, பாஜகவை வெளியேற்றியிருக்கிறது என்பதால், இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. அதேசமயம், திமுகவில் உறுதியாயிருக்கும் சில கட்சிகள் மீதும் வலை விரித்திருப்பதாக தெரிகிறது. அதேபோல, பாமக என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை.
மேலிட பாஜக: தமிழக பாஜகவை பொறுத்தவரை, இதுவரை அதிமுகவுடன் சமசரம் என்ற பேச்சை எடுக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியையும் சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கவில்லை.. ஆனால், மேலிட பாஜகவை, அதிமுக தரப்பு இதுவரை பகைத்து கொள்ளாமல் இருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி சொல்கிறார்.. 1996ல் பாஜக தனித்து போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு மேல் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மூத்த தலைவர் பொன்.ராதா சொல்கிறார். பாஜக தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல என்று கேசவ விநாயகமும் சொல்லி உள்ளார்.
இப்படி மாறுபட்ட கருத்துக்கள் பாஜகவில் நிலவி வந்தாலும், மாநில தலைவர் அண்ணாமலையோ, அதிமுகவுடனான கூட்டணி குறித்து எதுவுமே பேசவில்லை. செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டதற்கும், எந்த பதிலையும் சொல்லாமல் மறுத்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி: சமீபத்தில் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், 45 நிமிடங்களுக்கு மேல் பேசியிருக்கிறார் அண்ணாமலை.., ஆனால், ஒரு வார்த்தை கூட அதிமுகவை பற்றியோ, எடப்பாடி பழனிசாமி பற்றியோ பேசவில்லையாம்.. ஆனால், கூட்டம் முடிந்ததும், அதே மேடையில் அண்ணாமலை, கேசவவிநாயகம், எச்.ராஜா என 3 பேர் மட்டும் 15 நிமிடங்கள் வரை தனியாக பேசியிருக்கிறார்கள்.
அதேபோல, அதிமுகவுக்கு எதிராக, நிறைய "மூவ்"களை அண்ணாமலை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.. தற்போது ஓய்வில் இருந்து வரும்நிலையில், ஓபிஎஸ்ஸுடன் சில காய்நகர்த்தலும் நடந்து வருகிறதாம். அதாவது, ஓபிஎஸ், தினகரனுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் வரை பேசிமுடிக்கப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்லாமல், வலுவான கூட்டணியை அதிமுக உருவாக்கிவிடக்கூடாது என்பதற்காகவே, மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
ஓபிஎஸ் பிளான்: அத்துடன், முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கூட்டணியை வலுப்படுத்துவது போன்ற அஜெண்டாவையும், கையில் எடுத்து வருகிறாராம் அண்ணாமலை. புரட்சி பயணத்தை ஓபிஎஸ்ஸும், நடைபயணத்தை அண்ணாமலையும் இனி தொடர போகும்நிலையில், இரு தரப்பிலுமே முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்கிறார்கள். இதைத்தவிர, அதிமுகவில், பாஜக ஆதரவாளர்களான முக்கிய தலைவர்களுக்கும், ஓபிஎஸ் தூண்டிலை விரித்து வருகிறாராம்.
ஏற்கனவே, அமமுக, ஓபிஎஸ், சசிகலா 3 பேருமே பாஜகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், பாமக, தேமுதிகவை கண்டிப்பாக கூட்டணியில் பாஜக இணைத்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்.. தமாகா வாசன், பாரிவேந்தர், ஜான்பாண்டியன் இவர்களும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாம்.
ஆக, அமமுக + ஓபிஎஸ் + சசிகலா + தமாகா + பாரிவேந்தர் + ஜான்பாண்டியன் + பாமக + தேமுதிக இவைகளுடன் பாஜக கூட்டணி அமைத்தால், எடப்பாடி பழனிசாமி யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? எப்படி எதிர்கொள்வார் என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.
என்னாகும்: பாஜகவை அதிமுக, தன்னுடைய கூட்டணியில் இணைத்து கொண்டால், அமமுக, ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த சிக்கல் வந்துவிடும்.. அதேசமயம், பாஜகவை கழட்டிவிட்டால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் ஓரளவு கிடைக்கும் என்றாலும், அதிமுகவுக்கு மொத்த சிக்கலும் வந்துவிடும் என்கிறார்கள் அரசியல் வியூகர்கள்.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications