அஸ்திவாரமே ஆடுதே.. பாஜக கூட்டணியில் இப்படி ஒரு மேட்டரா?அப்ப திராவிட கட்சிகளின் ஓட்டு சிதறுதா? அலர்ட்
சென்னை: அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளதா? அல்லது பாஜக கூட்டணி வலிமையாக உள்ளதா? என்பதைவிட, திமுகவின் வாக்கு வங்கியை எந்த கூட்டணி உடைக்க போகிறது என்ற ஆர்வம்தான் அரசியல் களத்தில் ஆரம்பமாகி உள்ளது.
இந்த முறை தேர்தலில், ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. அந்தவகையில், 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்கையும் அறிவித்துள்ளனர்..

பிளான் அதிரடி: இதற்கான சுற்றுப்பயணங்களையும் தேசிய தலைவர்கள் துவங்கியிருக்கிறார்கள். வேட்பாளர்களையும் மிக கவனமுடன் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அந்தவகையில், இந்த முறை தேர்தலில் களமிறக்க, பல்வேறு வியூகங்களும், திட்டங்களும், யோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. உதாரணத்துக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை பயன்படுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இவர்களுக்காகவே பாஜகவில் தனி அணி உருவாக்கப்பட்டு, மாநிலம், மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்..
மெகா திட்டம்: மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை கட்சியில் சேர்க்கும் பணி, பாஜக அரசு தொடர்பு பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மத்திய, மாநிலங்களில் 80 துறைகளிலிருந்து பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை கட்சியில் சேர்க்கவும் அல்லது ஆதரவாளர்களாக மாற்றவும், தேர்தல் நேரத்தில் இவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பிரச்சாரத்தில் இறக்க காரணம், மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் விவரங்கள் தெரிந்திருக்கும் என்பதால், அந்த விவரங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படும் என்று பாஜக கணக்கு போடுகிறதாம்.
அஜண்டா: தமிழகத்தில் இந்த முறை, எப்படியாவது காலூன்றுவதுடன், வாக்கு சதவீதத்தையும் உயர்த்திவிட வேண்டும் என்பதே பாஜகவின் பிரதான அஜண்டாவாக இருந்து வருகிறது. இதற்காகதான் அதிமுக கூட்டணியில் இணைய பெரிதும் முயற்சித்தது.. பீகாரில் நிதிஷ்குமாரை பயன்படுத்தியதுபோல, இங்கேயும் அதிமுகவை வைத்து பாஜகவை வளர்த்தெடுக்க பல்வேறு கணக்குகளை போட்டது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் காரணமாக, தனித்து போட்டியிட வேண்டிய சூழலுக்கு பாஜக ஆளாகி உள்ளது.. கடந்த தேர்தலில் அதிமுக தலைமையில், பாமக, பாஜக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமாகா, தேமுதிக, புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, ஓபிஎஸ், என மொத்த பேரும் திரண்டு களம் கண்டார்கள். இப்போது இந்த கூட்டணி, இரண்டாக உடைந்துள்ள நிலையில், பாஜக தனித்து களம் காண்கிறது.
வாக்கு வங்கி: அதிமுக இல்லாத சூழலில் வேறு வழியின்றி "பாதி" அதிமுகவாக காட்சிதரும் ஓபிஎஸ்ஸிடம், கூட்டணி வைத்து, தன்னுடைய தென்மாவட்ட "வாக்கு வங்கி அக்கவுண்ட்டையும்" பாஜக துவங்கியிருக்கிறது.
பாமகவை யார் கூட்டணிக்குள் கொண்டுவரப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு கடைசி நிமிடம் வரை நீடித்த நிலையில், பாஜக இதில் முந்திக்கொண்டது. காரணம், வட தமிழகத்தின் வாக்கு வங்கிக்காக பாமவையே பெரிதும் நம்பியிருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், பாமக, ஓபிஎஸ், தினகரன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், தேவநாதன், ஜிகே வாசன் என பாஜக கூட்டணி இறுதியாகி உள்ளது.
ஜாதிக்கட்சி: அதாவது, வன்னியர் வாக்குகளுக்கு பாமக, தேவேந்திர குல வேளாளர் வாக்குகளுக்கு தமமுக, முதலியார் வாக்குகளுக்கு புதிய நீதிக்கட்சி, யாதவர் வாக்குகளுக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், முக்குலதோர் வாக்குகளுக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், உடையார் வாக்குகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி என நாலாபக்கமும் கணக்கு போட்டே, கூட்டணி வலையை விரித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால், ஜி.கே.வாசன் தவிர மற்ற அத்தனை கட்சிகளும் ஜாதிக்கட்சிகளாகவே கூட்டணியில் இடம்பெற்றிருப்பது பலரையும் கவனிக்க செய்து வருகிறது.. அதுமட்டுமல்ல, பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததை அந்தந்த கட்சிகளிலுள்ள நிர்வாகிகள் பலரே விரும்பவில்லை என்றும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.
திராவிட கட்சிகள்: எனினும், எந்த காலத்திலும் தமிழகத்தில் மதவாதமும், வெறுப்பு அரசியலும் எடுபடாத சூழலில், தற்போது பாஜக உருவாக்கியிருக்கும் கூட்டணி, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தருமா? திராவிடர் கட்சி ஓட்டுக்களை பிரிக்கும் சக்தியாக திகழுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications