வேலை வெட்டி இல்லாமயா இங்க வந்திருக்கோம்? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.. சமாதானம் செய்த துரைமுருகன்!
சென்னை : அமைச்சர் ஆர்.காந்தி, அதிமுகவினர் இந்த கேள்வியை கேட்கலாமா என்ற ரீதியில் பேசியதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆவேசமடைந்து, "வேலை வெட்டி இல்லாமல் வெட்டியாகவா இங்கு அமர்ந்துள்ளோம், மக்கள் பிரச்சனையை அதிமுகவினர் பேசாமல் வேறு யார் பேசுவது?" எனக் கோபமாகப் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. விலையில்லா வேட்டி, சேலை திட்டம் குறித்து இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அதிமுக ஆட்சி காலத்தில் இலவச வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது திமுக அரசு, நெசவாளர்களுக்கு உற்பத்தி பொருட்களை உரிய முறையில் கொடுக்காததால், வேட்டி சேலை வழங்க தாமதமாவதாகவும், பொதுமக்கள் தங்களிடம் இதுகுறித்துக் கேட்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அதற்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளிக்கும்போது, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து விமர்சித்தார். இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பான கேள்வியை அதிமுகவினர் தவிர யார் வேண்டுமானாலும் கேட்கலாம். 2012, 2016 அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து யாராவது பேச முடியுமா என்றார் அமைச்சர் காந்தி. அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

இதனால், சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேட்டி சேலை வழங்கி முடிக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்திருந்தார். அதை தற்போது கேட்கும்போது பதில் சொல்ல முடியாது என்றால் எதற்காக இலாகாவை கையில் வைத்துள்ளார் என ஆவேசமாக பேசினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு உரிய பதிலை அமைச்சர் வழங்கினால் போதுமானது. ஏன் தாமதம் என உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் வழங்கினால் போதுமானது எனக் கூறினார். இதையடுத்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு வேட்டி, சேலை இன்னும் வந்து சேரவில்லை என ராஜன் செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு அதிமுக ஆட்சியிலும் தாமதமாக வழங்கப்பட்டதையே அமைச்சர் பதிலாக சொன்னார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆவேசமாக எழுந்து, "மக்கள் பிரச்னையை பற்றிப் பேசத்தான் பேரவைக்கு வந்துள்ளோம். மக்கள் பிரச்சனையை அதிமுகவினர் பேசாமல் வேறு யார் பேசுவது? வேலை, வெட்டி இல்லாமல் வெட்டியாகவா இங்கு வந்து அமர்ந்துள்ளோம்?" என்று ஆவேசமாகப் பேசினார். இதனால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதனையடுத்து அவை முன்னவர் துரைமுருகன் குறுக்கிட்டு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்வார். அதோடு விடுங்கள். வேறு யாரும் பேச வேண்டாம் என சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து, கூச்சல் குழப்பம் கட்டுக்குள் வந்தது.












Click it and Unblock the Notifications