சென்னையில் வீடு விற்க போறீங்களா.. ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிய சுபாஷ்சந்த் ஜெயின் கதையை பாருங்க
சென்னை: சென்னையில் வீடு வாங்குவோர் அல்லது வீட்டை விற்போர் இருவருமே கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சொத்து பரிமாற்றத்தில் கோடிகளில் பணம் பரிமாற்றம் நடப்பதால், அதனை வைத்து மோசடி செய்வது பல இடங்களில் நடக்கிறது. வேறு ஒருவரின் இடத்தை ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்வது, வேறு ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதனை லீசுக்கு விட்டு ஏமாற்றுவது நடக்கிறது. சென்னையில் வீட்டை வாங்கிக்கொண்டு ரூ.97 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார். எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் வீட்டு மனை,இடம், வீடு, அடுக்குமாடி என எது வாங்குவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக கையாள வேண்டும். சிஎம்டிஏ அங்கீகாரம் உள்ளதா, ரெரா அனுமதி உள்ளதா என்பதையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இவை இல்லாத வீட்டு மனை அல்லது வீடுகளை வாங்கவே கூடாது.

அதேபோல் சிலர் பழைய வீடுகளை வாங்கவும், விற்கவும் ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், வீடு அவருடையது தானா.. வீட்டின் நிலை என்ன.. வீட்டின் மீது வில்லங்கம் உள்ளதா, தனிப்பட்டா உள்ளதா, பலருக்கு பங்கு உள்ள பூர்வீக வீட்டை விற்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும். ரியல் எஸ்டேட் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்களின் மூலம் நிலத்தின் ஆவணங்களை ஆராய்ந்த பின்னரே இடம் அல்லது வீடு வாங்க முடிவெடுக்க வேண்டும்.
அதேபோல் சென்னையில் வீடு விற்பவர்கள், கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கக்கூடாது. பணத்தை அவரிடம் முன்கூட்டியே வாங்க வேண்டும்.பத்திரப்பதிவு செய்தவுடன் தருவதாக கூறுவதாக இருந்தால், அதற்கு செக் உள்ளிட்ட கையெழுத்திட்ட ஆவணங்களை வாங்க வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் தான் வீடுகளை விற்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. சென்னை காரப்பாக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சென்னை பெரம்பூர் ராஜவேலு தெருவைச் சேர்ந்த 56 வயதாகும் ஹேமமாலினி என்பவருக்கு சொந்தமான காரப்பாக்கம், தென்றல் நகரில் வீடு உள்ளது. இந்த வீட்டை அவரது நண்பர் மூலம் அறிமுகமான அயனாவரம், வி.பி. காலனியை சேர்ந்த சுபாஷ் சந்த் ஜெயின் (64) என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.50 லட்சம் பெற்றுள்ளார் ஹேமமாலினி.
மேற்கொண்டு பணம் தேவைப்பட்டதால் அந்த வீட்டை விற்க ஹேமமாலினி முடிவு செய்திருக்கிறார். அதற்கு சுபாஷ் சந்த் ஜெயின், தானே அந்த வீட்டை வாங்கி கொள்வதாகவும், இதற்காக ரூ.1.60 கோடி விலை நிர்ணயம் செய்து, ஏற்கனவே வாங்கிய கடன் மற்றும் வட்டி போக மீதமுள்ள ரூ.97 லட்சம் கொடுப்பதாக உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து கடந்த ஆண்டு நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் சுபாஷ்சந்த் ஜெயின் மனைவி பெயரில் அந்த வீட்டை ஹேமமாலினி கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மீதமுள்ள ரூ.97 லட்சத்தை கொடுக்காமல் சுபாஷ் சந்த் ஜெயின் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து ஹேமமாலினி அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் சந்த் ஜெயினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வீடு விற்பவர்கள் பணத்தை வாங்கிய பின்னரே பத்திரப்பதிவு செய்து தர வேண்டும். அல்லது சட்டப்பூர்வ ஒப்பந்தம் போட வேண்டும். யார் ஏமாற்றினாலும் கம்பி எண்ணும் அளவிற்கு ஒப்பந்தம் இருக்க வேண்டும். அதேபோல் செக் உள்ளிட்ட ஆவணங்கள் வாங்கி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி ஏமாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications