நானும் திமுககாரன் தான்! ரொம்ப பேசாதீங்க! எகிறிய ஒப்பந்ததாரர்! எம்எல்ஏ முன்னிலையில் நடந்த பஞ்சாயத்து!
சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள சிவன் கோவில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் விவகாரத்தில், ஒப்பந்ததாரருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தாமும் திமுக காரன் தான் என்றும் பார்த்து பேசுமாறும் தன்னிடம் வாக்குவாதம் செய்த திமுகவினருக்கு ஒப்பந்ததாரர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இவ்வளவு களேபரங்களும் ஆய்வுக்கு சென்ற மதுரவாயல் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காரப்பாக்கம் கணபதி மற்றும் துணை மேயர் சைதை மகேஷ் முன்னிலையில் தான் நடைபெற்றிருக்கிறது.

கோவில் குளம்
சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான குளம் தூர்வாரப்பட்டு கரை கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மதுரவாயல் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காரப்பாக்கம் கணபதி மற்றும் துணை மேயர் சைதை மகேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்யச் சென்றார்கள். அப்போது அங்கு திரண்ட அந்தப் பகுதி திமுகவினர், கோவில் குளம் சீரமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருவதாகவும் ஏனோ தானோ என ஒப்பந்ததாரர் வேலை செய்வதாகவும் குற்றஞ்சாட்டினர்.

ஒப்பந்ததாரர் மீது புகார்
ஒப்பந்ததாரர் அக்கறையோடு இந்தப் பணிகளை கவனிக்கவில்லை என சாடினர். பதிலுக்கு பேசிய ஒப்பந்ததாரர் தாமும் திமுக காரன் தான் என்றும் உண்மையை பேசுமாறும் கூறியிருக்கிறார். இதனால் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் முற்றத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து அங்கிருந்த மதுரவாயல் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காரப்பாக்கம் கணபதி, திமுகவினரை அமைதிப்படுத்தி எதை பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கப்பா தேவையில்லாமல் பேசாதீர்கள் எனக் கூறி ஆஃப் செய்திருக்கிறார்.

ரூ.85 லட்சம் மதிப்பு
இதனிடையே வளசரவாக்கம் சிவன் கோவில் குளம் தூர்வாரும் பணியின் திட்ட மதிப்பு ரூ.85 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பணி காலதாமதமாக நடப்பதன் காரணம் என்ன, நடைமுறையில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பது பற்றியெல்லாம் கேட்டறிந்த சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மகேஷ் குமார் விரைந்து பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்திவிட்டு புறப்பட்டார்.

தூர் வாரும் பணிகள்
திமுக ஆட்சி அமைந்தது முதல் தமிழகம் முழுவதும் ஏரி, குளம், கால்வாய் தூர் வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதல்வர் இந்தப் பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்குவதுடன் தாமே நேரடியாக சென்று ஆய்வும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications