ஜோதிகா மேடம்! மும்பையில் ரூ 68 கோடியில் பங்களா கேக்குதா?.. லாஜிக் இல்லாமல் கேட்கும் அர்ஜுன் சம்பத்
மும்பையில் ரூ 68 கோடியில் உங்களுக்கு சொகுசு பங்களா கேக்குதா என நடிகை ஜோதிகாவுக்கு அர்ஜுன் சம்பத் கேள்வி
சென்னை: மும்பையில் ரூ 68 கோடியில் உங்களுக்கு சொகுசு பங்களா கேக்குதா என நடிகை ஜோதிகாவுக்கு இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சரித்திரக் காலத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு பல வேடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் பிரம்மாணடம் தெரிந்ததால் ரசிகர்கள் இந்த படம் குறித்து ஆவலாக இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஜோதிகா மற்றும் குழந்தைகளோடு மும்பையில் குடியேறிவிட்டார் சூர்யா. அங்கு ஜோதிகாவின் தாயார் தனிமையில் வசித்து வருகிறார்.

வாடகை வீடு
அவரை கவனித்துக் கொள்ளவே அங்கு வாடகை வீட்டில் சூர்யா ஜோதிகா, அவர்களுடயை குழந்தைகள் தங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சூர்யா மும்பையில் புதிய பிளாட் ஒன்றை வாங்கியிருப்பதாக தெரிகிறது. இதன் மதிப்பு ரூ 68 கோடி என சொல்கிறார்கள். மொத்தம் 9 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீடு அமைந்திருக்கும் பகுதி மும்பையில் சினிமா விஐபிக்கள் பலரும் குடியிருக்கும் பகுதி என்கிறார்கள்.

சூர்யா ஜோதிகா
சூர்யா - ஜோதிகா, நடிகர் கார்த்தி ஆகியோர் எப்போதும் சமூகம் சார்ந்த கருத்துகளை பேசி வருவார்கள். சூர்யா- கார்த்தி நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சனைக்கு குரல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக நடந்த பெண்களுக்கான ஒரு விருது வழங்கும் விழாவில் தன் தஞ்சாவூர் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து ஜோதிகா பேசினார்.

ஷூட்டிங்
உடன்பிறப்பே பட ஷூட்டிங்கின் போது தஞ்சை பெரிய கோயில் குறித்து ஜோதிகா பேசியிருந்தார். அவர் பேசுகையில் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே ஷூட்டிங் நடந்தது. அப்போது அந்த மருத்துவமனையை மிக மேசமாகப் பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால்கூட சொல்ல முடியாது. எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க. அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்க என பேசியிருந்தார்.

சர்ச்சை
ஜோதிகா பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சூர்யா வீடு வாங்கியது குறித்து இந்து மக்கள கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஜோதிகா மேடம் 68 கோடியில் எத்தனை ஏழைகளுக்கு ஆஸ்பத்திரி கட்டி கொடுத்திருக்கலாம் ? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? ஆஸ்பத்திரி வசதி கூட இல்லாம ஏழைகள் விழிபிதுங்கி இருக்கும் போது மும்பைல உங்களுக்கு சொகுசு பங்களா கேக்குதா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடும் கண்டனம்
இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தஞ்சை அரசு மருத்துவமனையை பராமரிப்பது குறித்து ஜோதிகா பேசியது தமிழக அரசை குற்றம்சாட்டிதானே தவிர எந்த அரசியல்வாதிகள் ஏன் சொத்து சேர்க்கிறார்கள் என்றா கேட்டிருந்தார். ஆனால் அர்ஜுன் சம்பத் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் ரூ 68 கோடி வீடு வாங்கியதற்கு பதில் எத்தனையோ ஆஸ்பத்திரிகளை கட்டியிருக்கலாம் என்கிறாரே.

சுயமாக சம்பாதித்து
சூர்யா - ஜோதிகா சுயமாக சம்பாதித்து அவர்கள் சொத்து வாங்கியதற்கும் மக்களின் வரி பணத்தில் இயங்கும் ஒரு மருத்துவமனையில் தரம் இல்லாததை சுட்டிக் காட்டியதற்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்புகிறார்கள். ஜோதிகா என்ன கோயில் எதற்கு என கேட்ட போது எந்த அரசியல்வாதியின் சொத்து குறித்தாவது கேட்டாரா என அர்ஜுன் சம்பத்திற்கு கண்டனங்கள் வலுக்கின்றன.












Click it and Unblock the Notifications