ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி கைது! செப். 2 வரை சிறை
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீஸார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி. இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகித்த போலீஸார் தலைமறைவாக இருந்த பொற்கொடியை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் ஆந்திராவில் பதுங்கியிருப்பதை அறிந்த செம்பியம் தனிப்படை போலீஸார் அந்த பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொற்கொடி கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை பொற்கொடியையும் சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 25 பேர் ஆகும். அந்த 25 பேரில் ஒருவரான திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருக்கே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என இந்த வழக்கில் அடுத்தடுத்து சிக்க்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது போல் இதுவரை 23 பேர் வரை கைது ஆகியுள்ளனர். இவர்களை போலீஸார் ஒவ்வொருவராக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது போலீஸ் காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர்.
இந்த வழக்கில் அதிமுக மாஜி நிர்வாகி மலர்க்கொடி, கஞ்சா அஞ்சலை ஆகிய இரு பெண்கள் கைதான நிலையில் தற்போது ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான பாம் சரவணனின் தம்பி தென்னரசுவை கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே அவரது குடும்பத்தினர் கண் முன்னே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.
15 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட புளியந்தோப்பை சேர்ந்தவர்தான் பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் வைத்து தென்னரசு கொலைக்கு ஒரு கும்பல் பழிவாங்கியது.
இந்த வழக்கில் அரக்கோணம் ஒற்றைக்கண் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி, நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின், சென்னை ஆயிரம் விளக்கு அதிமுக 111 ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கும்பலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்தான் நிதியுதவி அளித்து கொலையாளிகளுக்கு தங்குவதற்கு இடமும் கொடுத்ததாக ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் கருதி வந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications