ஆம்ஸ்டிராங் கொலை.. முக்கிய குற்றவாளி சீசிங் ராஜா எங்கே? 4 மனைவிகளும் சொன்ன ஒரே விஷயம்! போலீஸ் அதிரடி
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் சீசிங் ராஜா தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே சீசிங் ராஜாவின் 4 மனைவிகளிடம் நடத்திய விசாரணையில் சில ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
பகுஜன் சமாஜ் மாநிலக் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.. இவர் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னையில் அவரது இல்லத்தின் அருகே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை: இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற திருவெங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்
4 மனைவிகள்: மேலும், இந்த சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக இருக்கும் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை இப்போது போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரவுடி சீசிங் ராஜாவுக்கு மொத்தம் 4 மனைவிகள் இருக்கும் நிலையில், அவர்கள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. முதல் மனைவி சென்னையில் இருப்பதாகவும் , மற்ற 3 மூன்று மனைவிகள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர், கிருஷ்ணாம்பட்டினம் பகுதிகளில் வசித்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
கிருஷ்ணாம்பட்டினம் பகுதியில் துறைமுகம் இருக்கும் நிலையில், அங்கே தான் சீசிங் ராஜா பதுங்கி இருப்பாராம்.. அவ்வப்போது மட்டும் வெளியில் வந்து குடும்பத்தினரைப் பார்த்துவிட்டுச் செல்வாராம். அப்போது தனது கூட்டாளி ரவுடிகளை சந்தித்து சதி ஆலோசனை கூறுவதையும் சீசிங் ராஜா வழக்கமாக வைத்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. எப்போதும் கிருஷ்ணாம்பட்டினம் துறைமுக பகுதியில் பதுங்கும் சீசிங் ராஜா சில நேரங்களில் ராஜமுந்திரி பகுதியிலும் பதுங்கி இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
எங்கே: இதற்கிடையே சீசிங் ராஜா இப்போது எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிய போலீசார் அவரது நான்கு மனைவிகளிடமும் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது போலீசார் தன்னை நெருங்குவதைத் தெரிந்து கொண்ட சீசிங் ராஜா போலீசாரிடம் இருந்து தப்ப கிருஷ்ணாம்பட்டினத்தில் இருந்து ஆந்திராவின் உள் மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டாராம்.
விஜயநகரம், ஸ்ரீகாகுளம், அனக பள்ளி பகுதிகளில் மாறி மாறி பதுங்கி வருவதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும், போலீஸ் நெருக்கடி அதிகரித்ததால் கடந்த ஒரு மாதமாக குடும்பத்தினர் யாரையும் அவர் தொடர்பு கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே இப்போது ஆந்திராவின் உள் மாவட்டங்களில் பதுங்கி உள்ள சீசிங் ராஜாவோ தேடும் பணிகளை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.
அடுத்து என்ன: ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் இந்த சீசிங் ராஜா மற்றும் சம்போ செந்தில் ஆகியோர் தான் முக்கிய குற்றவாளிகளாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. எனவே, அவர்கள் இருவரையும் பிடித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல அதிமுக்கிய தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications