ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்தா? அப்படியேதும் போலீஸாருக்கு தகவல் கிடைக்கவில்லையே- ரத்தோர் மறுப்பு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவதற்கு முன்பே அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற விஷயத்தை அறிந்த போலீஸார் அவருக்கு மூன்று முறை எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அப்படி எந்த தகவலும் காவல் துறைக்கு கிடைக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் வழக்கறிஞர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

பல்வேறு தேர்தல் விவாதங்களில் தொலைகாட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். தற்போது அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்வையிட ஆம்ஸ்ட்ராங் சென்றிருந்தார்.
அவருடன் பெரம்பூரை சேர்ந்த வீரமணி (65), பாலாஜி ஆகியோரும் சென்றிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு 6 பேர், 3 பைக்குகளில் வந்தனர். இதையடுத்து திடீரென ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து வெட்டினர். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத ஆம்ஸ்ட்ராங் தப்ப முடியாமல் அவர்களின் கொலை வெறிக்கு இரையானார்.
அந்த 6 பேரையும் வீரமணியும் பாலாஜியும் தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் அவர்களையும் சேர்த்து வெட்டியது. இதில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.
இதையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காயமடைந்த வீரமணி, பாலாஜி ஆகியோரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. ஆம்ஸ்ட்ராங் வெட்டப்பட்ட சம்பவம் இரவே பரவிய நிலையில் அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் மருத்துவமனைக்கு குவியத் தொடங்கினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து செம்பியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். ஆம்ஸ்டிராங் படுகாயங்களுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது விஷயம் அறிந்து வந்த இயக்குநர் பா.ரஞ்சித் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். அது போல் நடிகர் தினாவும் அங்கு விரைந்தார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஒரு திடுக் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து உளவுத் துறையும் குற்றப்பிரிவு போலீஸாரும் உள்ளூர் போலீஸாருக்கு தெரிவித்தனராம். "உங்களை கொல்வதற்கு ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்கள். எதற்கு எச்சரிக்கையாக இருங்கள்" என போலீஸார் அவரிடமே 3 முறை எச்சரிக்கை விடுத்திருந்தனராம்.
அதே போல் கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. அந்த கும்பல்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றிருக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து ஆதரவாளர்களிடம் கேட்ட போது, போலீஸார் எச்சரிக்கையை விடுத்ததும் அண்ணன் (ஆம்ஸ்ட்ராங்) உஷாராகதான் இருந்தார்.
எனினும் அவர் தெருவில் கட்டும் வீடுதானே என சற்று கவனக்குறைவுடன் அங்கு சென்றுவிட்டார். அவருடன் இன்னும் சிலர் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. தனியாக, குறைந்த ஆட்களுடன் அண்ணன் எப்போது சிக்குவார் என கண்காணித்து கொன்றிருக்கிறார்கள் என கண்ணீருடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் கொலை அல்ல. முன் விரோதத்தால் நடந்த கொலையாக இருக்கலாம். பழிக்கு பழித் தீர்க்கும் கொலையாகவும் இருக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய போவது குறித்து போலீஸாருக்கு முன்கூட்டியே எந்த வித தகவலும் வரவில்லை. எனவே தவறான செய்தியை பரப்பாதீர்கள் என ரத்தோர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications