மனதில் இடம் பிடித்த ஸ்டாலின்.. ராணுவ அதிகாரியின் நெகிழ்ச்சி.. முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம்
முதல்வர் ஸ்டாலினுக்கு ராணுவ அதிகாரி நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்
சென்னை: ராணுவ வீரர்கள் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள் என்றும், உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள் தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும் என்றும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு ராணுவ அதிகாரி அருண் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
குன்னூர் நஞ்சப்ப சத்திரம் காட்டுப்பகுதியில் முப்படைத் தளபதி பிபின் ராவுத் அவரது மனைவி உட்பட 14 ராணுவ வீரர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி, தீப்பிடித்து எரிந்ததில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் என்று உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தனித்தனியாக முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ஆறுதல்
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அ.அருண், கடிதம் எழுதியுள்ளார்... அதில் உள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் 8-12-2021 அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்த துயரமான நேரத்தில், அவர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராணுவ வீரர்கள்
தகவல் அறிந்த உடனே- நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள்...

தமிழ்நாடு அரசு
அந்த தருணத்தில் எந்த எந்த உதவி முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள் தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும். தக்ஷின் பாரத் பகுதியின் தலைமை அலுவலர் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியான ஆதரவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

கடினமான சூழல்
உங்களுடைய இந்த செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், மூத்த ராணுவ வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற உணர்வை ஏற்படுத்தி, ஊக்கத்தை அளிப்பதோடு தேவைப்படும் காலங்களில் அவர்களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும்-நம் மாநிலத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications