தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை உயர்கிறது? இல்லத்தரசிகளுக்கு ஷாக்!
சென்னை: தமிழகத்தில், தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்க கூடிய ஆரோக்யா நிறுவனம் நாளை முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65ல் இருந்து 67 ஆக உயர உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆவின் பால் மட்டும் இன்றி பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் விற்பனையாகின்றன. 10 ரூபாய் பாக்கெட் முதல் அரை லிட்டர், ஒரு லிட்டர் என பல்வேறு கொள்ளவுகளில் இந்த பாக்கெட் பால்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் பாலை போலவே தனியார் நிறுவனங்களின் பாலையும் மக்கள் அதிக அளவு வாங்குவதை காண முடிகிறது.

தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்க கூடிய ஆரோக்யா நிறுவனம் நாளை முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65ல் இருந்து 67 ஆக உயர உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ தட்டுப்பாடோ இல்லாத சூழலில், தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஆரோக்யா பால், தயிர் விற்பனையை நாளை காலை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இதை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36ல் இருந்து 37 ஆகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தபப்ட்ட பால் அரை லிட்டர் ரூ.31ல் இருந்து 32 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.58ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30 ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.
இது பொதுமக்கள் தலையில், பெரும் பாரத்தை சுமத்தும் செயலாகும். அதுமட்டும் இன்றி மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்த தூண்டுவது போல ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடு அமைந்துள்ளது கண்டித்தக்கது ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் பால் தயிர், விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைத்தனர்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள் விலை, வாகன எரிபொருள் விலை உள்ளிடவற்றின் விலைகளில் மட்டுமல்ல. பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட கமிஷன் தொகையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை ஏற்றுவது ஏற்புடையது கிடையாது. எனவே, இந்த விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று தெரிவிதுள்ளார்.












Click it and Unblock the Notifications