கோர விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை! ஒடிசா முதல்வரை போனில் அழைத்த ஸ்டாலின்.. உடனே பறக்கிறது குழு!
சென்னை : கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளான நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து குழுவை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியதால் ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் இன்று இரவு 7.20 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த போது, அதே தண்டவாளத்தில் திடீரென எதிரே வந்த சரக்கு ரயில் மோதியது. இரண்டு ரயில்களும் வேகமாக ஒன்றுடன் ஒன்று பயங்கர சத்தத்துடன் மோதின. இதில் ரயில் தடம் புரண்டது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டிகள் சரக்கு ரயில் மீது ஏறி நின்றன. வனப்பகுதியில் விபத்து நடந்ததால் உடனடியாக யாருக்கும் தெரியவரவில்லை. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் அடுத்த ஸ்டேஷனுக்கு வராதது குறித்து அங்கிருந்த அதிகாரி புகார் அளித்த பிறகுதான் இந்த விபத்து குறித்து தெரியவந்ததாக கூறப்படுகிறது.
பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாக பஜார் ரயில் நிலையம் அருகே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ரயில் விபத்தில், 8 ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகளுக்குள் 200க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கியுள்ள நிலையில், இரவு நேரம் என்பதால் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 130க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் பேரிடர் மீட்பு பணியினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவசர கால கட்டுப்பாட்டு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து அறிந்துகொள்ள அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா) +91 67822 62286 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரயில் விபத்து பற்றி அறிந்ததும் உடனடியாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க உள்ளதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு நாளை ஒடிசா செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications