சூர்யாவை கைது பண்ணனும்.. ‘சாதிக்கை விட மோசம்’.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பாஜக காயத்ரி ரகுராம்!
சென்னை : திருச்சி சூர்யா பேசியது சைதை சாதிக் பேசியதை விட மோசமானது. தமிழக முதல்வர், திருச்சி சூர்யா மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
பாஜக பெண் நிர்வாகியிடம் மோசமான முறையில் கடும் ஆபாசமாக பேசிய சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை தேவை என பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 6 மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராம், நான் பாஜகவிற்கு எதிராக இருப்பதாக யார் கூறினாலும் அவர்களுக்கு நான் எதிரானவள். அண்ணாமலை அந்த கருத்தை தெரிவித்தால் அவரையும் நான் எதிர்ப்பேன் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஆடியோ - ஆபாசம்
பாஜக பெண் நிர்வாகியிடம் பாஜகவின் ஓ.பி.சி பிரிவு செயலாளர் சூர்யா சிவா தொலைபேசியில் ஆபாசமாகப் பேசியதாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் கட்சியினர் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், ஆடியோ விவகாரம் தொடர்பாக டெய்சிக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டார். இதையடுத்து காயத்ரி ரகுராமிடமிருந்து அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளது. அவர் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்தார்.

காயத்ரி விளக்கம்
தன் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே தன்னை இடைநீக்கம் செய்துவிட்டதாக காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், தனிப்பட்ட முறையில் யார் என்னைத் தாக்கினாலும் அவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன். இது என் உரிமை. கருத்துரிமையை முடக்குவது வருத்தமாக இருக்கிறது. அதற்காக என்னை இடை நீக்கம் செய்திருப்பது, அதுவும் கட்சிக்குக் களங்கம் என்று கூறியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எட்டு வருடமாக என் உழைப்பை கட்சிக்கு கொடுத்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது பாஜகவுக்கு நான் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது.

குறிவைத்து
3 மாதங்களுக்கு முன்பாக கட்சியில் சேர்ந்த செல்வக்குமார் என்ற நபர், கட்சிக்கு வந்த உடனேயே பொறுப்பு வாங்கி, என்னை கொச்சையாகப் பேசும் ட்விட்டர் பதிவுகளில் லைக் போடுகிறார். அதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன். செல்வக்குமார் அறிவுசார் பிரிவின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர்கள் எல்லாம் சேர்ந்து கோவை க்ரூப் என்று ஒரு குழு வைத்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களா, ஊழியர்களா என்று தெரியவில்லை. அவர்கள் வார் ரூம் போல ஒன்றை நடத்துகிறார்கள். அங்கிருந்துதான் நான் குறிவைக்கப்பட்டேன்.

அண்ணாமலைக்காக
செல்வக்குமார் அண்ணாமலைக்காக வேலை பார்ப்பதாக கேள்விப்பட்டேன். செல்வக்குமார் போன்றவர்கள் சக்தி வாய்ந்த நபர்களாகச் செயல்படுகிறார்கள். அந்த நபர் என்ன சொன்னாலும் செய்வார்கள். கட்சியில் இந்த விவகாரத்தை நேரடியாகச் சொல்ல நேரம் கொடுக்கவில்லை. அதற்கு முன்பே என்னை இடை நீக்கம் செய்துவிட்டார்கள். விளக்கம் சொல்லக்கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அண்ணாமலை எப்போதும் பிஸியாக இருப்பார். அவரிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்வதற்கு முன்பாக என்னை இடைநீக்கம் செய்து விட்டார்கள்.

அண்ணாமலை பேசியது
சூர்யா சிவா ஆபாசமாகப் பேசியிருக்கும்போது, நாங்கள் கொந்தளிப்பது இயல்புதான். அது என் உரிமை. ஆனால், அண்ணாமலையின் முடிவை நான் விமர்சிக்க முடியாது. ஆனால், அது வருத்தமளிக்கிறது. காசியில் நடக்கும் தமிழ்ச் சங்கமத்திற்கு எங்களையெல்லாம் அழைக்கவேயில்லை. நிறையப் பேர் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், அவர்களையெல்லாம் அழைக்கவில்லை. அதைப் பற்றி மட்டும் சிறிய அளவில் பதிவிட்டேன். மற்றபடி கட்சிக்கு எதிராக எதையும் கூறவில்லை. அண்ணாமலை என்னிடம் பேசினார். இதுவரைக்கு உங்களுக்கு என்ன செய்யவில்லைன்னு புகார் சொல்கிறீர்கள் என்று கேட்டார். ஃபெஃப்சி சிவாவின் விவகாரத்தை சுட்டிக்காட்டினேன். என் பக்கத்தை நீங்கள் கேட்கவேயில்லை என்று சொன்னேன்.

முதல்வருக்கு கோரிக்கை
நாம் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்றால், சூர்யா சிவாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். என்னை விசாரிக்க நேரம் கொடுக்கவில்லை. அவரை விசாரிக்க நேரம் கொடுக்கிறார்கள். சூர்யா சிவாவை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும். இன்று டெய்சிக்கு நடந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதை விட மோசமானது. தமிழக முதல்வர், சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications