முடிவுக்கு வராத ஜெ. மரண மர்மம்.. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால நீட்டிப்பு
சென்னை: முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் உட்பட பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து, 2017 ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைப்பதன் முன்னோட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அரசு அதிகாரிகள், அப்போலோ மருத்துவர்கள், நர்சுகள் என நிறைய பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் முடிவடைந்தபோது, மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்க கோரி பொதுத்துறை செயலாளருக்கு ஆணைய தலைவர் ஆறுமுகசாமி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மேலும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
ஆனால், இப்போது, ஆணைய விசாரணையை நிறைவு செய்ய, மேலும் 4 மாதம் அவகாசம் தேவை எனக் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆணையத்தின் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications