வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 மாவட்டங்களில் அடித்து நொறுக்கும் கனமழை! வானிலை மையம் அலர்ட்
குமரிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழப்பதால், 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
சென்னை: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுவிழக்கும் நிலையில், 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பொங்கலுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், அதன் பின்னர் வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்தது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகப் பரவலாக மாநிலத்தில் நல்ல மழை பெய்தது. எதிர்பாராத விதமாகப் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வ மையம் பகிர்ந்துள்ளது. நேற்று (02.02.2023) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று (03.02.2023) தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக இன்று (பிப்.3) தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் நாட்கள்
நாளை (பிப்.4) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (பிப்.5) முதல் வரும் பிப்.7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் திருநெல்வேலி ஊத்து பகுதியில் 160 மிமீ, நாலுமுக்கு பகுதியில்130 மிமீ, காக்காச்சி பகுதியில் 120 மிமீ, மாஞ்சோலை, வேளாங்கண்ணி 10 மிமீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று பிப்3ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல நாளை (பிப்.4) குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications