நாடி பிடித்த வெதர்மேன்! உச்சி குளிர்ந்த சென்னை.. காலையிலேயே அடைமழை கொட்டி தீர்த்தது
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் 100 டிகிரியை கடந்து கொளுத்தி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென அடைமழை பெய்து மண்ணை குளிர செய்தது. இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் சென்னையில் ஒரு சில இடங்களில் திடீரென மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ம் தேதி அக்னி வெயில் தொடங்கியது. ஆனால் இந்த வெயில் தொடங்குவதற்கு முன்னரே மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்க தொடங்கிவிட்டது. இதனையடுத்து, அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வழக்கம்போல வெயிலும் வாட்டியது. அன்றாடம், பணிக்கு செல்வோர், கூலி தொழிலாளிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அக்னி கடந்த 26ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் வேலூர் மட்டுமல்லாது சென்னை, மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. சென்னையை பொறுத்த அளவில் வெயில் 104 டிகிரி எனும் அளவுக்கு வீசி வந்தது, உடன் அனல் காற்றும் வீசியது. இந்த வெயில் தாக்கம் காரணமாக எனவே நேற்று திறக்கப்பட இருந்த பள்ளிகள் 14ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
இந்நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு வெப்பம்+அனல் காற்று இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், "தற்போதைய இந்த அதீத வெப்ப நிலைக்கு வறண்ட மேற்கு திசை காற்றுதான் காரணம். பொதுவாக மே மாதம் முடிந்துவிட்டால் வெப்பம் குறைந்துவிடும் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஜூன் மாதம் வரை நீடிக்கும். கடந்த ஆண்டுகளில் இதுபோன்று அதீத வெப்பம் இதே மாத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு, ஜூன் மாத்தின் 14 நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரியை தொட்டிருந்தது. எனவே இந்த வெப்பநிலை குறித்து கவலையடையாமல் இதிலிருந்து தற்காக்கும் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றும் இரண்டு நாட்களுக்கு இதே அளவு வெயில் நீடிக்கும். பின்னர் காற்றின் திசை மாறுபாடு காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

இவர் கூறியதை போலவே சென்னையில் நேற்று வெயில் 105 டிகிரி வரை எட்டியது. ஆனால் மாலை 4 மணிக்கு மேல் புறநகர் பகுதிகளான, அம்பத்தூர், மாதவரம், ரெட்டேரி, வில்லிவாக்கம், கொரட்டூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலும், கடலோர பகுதிகளான காசிமேடு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும் திடீரென அடை மழை பெய்ய தொடங்கியது. 15-20 நிமிடங்கள் பெய்த மழையால் சென்னை ஓரளவுக்கு குளிர்ந்தது.
இந்நிலையில் இன்று காலை, அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம், பாடி, ஐசிஎஃப், புரசை, ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் திடீரென அடைமழை பெய்தது. வெறும் 10 நிமிடங்கள் மட்டும் இந்த மழை பெய்தாலும், சென்னையின் சூட்டை ஓரளவு பாதியாக குறைத்து குளிர்ச்சியான சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஏற்கெனவெ தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Heavy showers Velachery 7:45 am #Chennai pic.twitter.com/1OUCsnptMQ
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) June 7, 2023












Click it and Unblock the Notifications