அதிமுக ஆட்சிக்கு வரும் என்கிறது அசோகா அறக்கட்டளை- வாக்காளர் கல்வி கருத்து கணிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாக்குகளை அதிகம் பெற்று அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் நடத்திய கருத்து கணிப்பு கூறுகிறது.
அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெண்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்ற கருத்து கணிப்பை நடத்தினர்.
இதில், 52% விவசாயிகளும் 51% பெண்களும் 36% தொழிலாளர்களும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பு கூறுகிறது
கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதாக 34% பேரும் வீழ்ச்சியடைந்துள்ளதாக 30% பேரும் தெரிவித்துள்ளனராம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு மிகச்சிறப்பு என்று 28% பேரும் சிறப்பு என்று 39% பேரும் தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவு கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு, கொரோனா நிவாரணம், பொங்கல் பரிசு, வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பு, குடிமராமத்து ஆகியவை மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக 54% பேர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளதோடு, அதனால் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை காட்டுவதாக உள்ளது. இத்திட்டங்கள் அதிமுகவிற்கு தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்று தரும் என்று தெரியவந்துள்ளது.
அதிமுகவிற்கு எதிரான அலை இல்லை என்று 41% பேரும் அலை உள்ளதாக 22% பேரும் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் வாக்குகளை கவர்ந்த தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று 40% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்த தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று 27% பேரும் தலித் மக்களை கவர்ந்த தலைவராக முதலமைச்சர் இருப்பதாக 32% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று 32% பேரும் மு.க. ஸ்டாலின் என்று 30% பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பினரின் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
RECOMMENDED STORIES