ஆம்ஸ்ட்ராங் உடற்கூராய்வு நிறைவு.. BSP அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஆய்வு.. அடுத்து என்ன?
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக நீண்ட காலமாக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் வடசென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வழக்கறிஞரான இவர், அப்பகுதியில் ஏராளமான மாணவர்களை வழக்கறிஞர்களாக உருவாக்கியுள்ளார். பல்வேறு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளார் ஆம்ஸ்ட்ராங்.

இந்நிலையில், நேற்று மாலை ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டுக்கு அருகே தனது நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல், மின்னல் வேகத்தில் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த தாக்குதலில் நிலை குலைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் உத்தரவிட்டனர். அதன்படி, வட சென்னை இணை ஆணையர் அபிஷேக் தீக்ஷித் தலைமையில் செம்பியம் காவல் நிலைய போலீஸார் 10 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து அவரது ஆதரவாளர்கள் பெரம்பூர் செம்பியத்தில் திரண்டனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வீடு அருகே அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல், பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடற்கூராய்வு முடிந்துள்ளது. விரைவில் அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடல், பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையொட்டி, பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அஸ்ரா கார்க் ஆய்வு நடத்தியுள்ளார்.
எனினும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான கொலையாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சியினர், மருத்துவமனை முன்பு ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், உடல் இன்று ஒப்படைக்கப்படுவதில் சிக்கல் எழும் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications