முஸ்லிம் இளைஞர்களை சுடுவது போல் வீடியோ.. அசாம் முதல்வரை நீக்க வேண்டும்.. எஸ்டிபிஐ
சென்னை: முஸ்லிம்களாக சித்தரிக்கப்பட்ட நபர்களை நோக்கி அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு ஏர் ரைபிள் மூலம் அடையாள ரீதியாகச் சுடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அதனுடன் "அந்நியர்கள் இல்லாத அசாம்", "கருணை கிடையாது", "நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை?" மற்றும் "வங்க தேசத்தவர்களுக்கு மன்னிப்பு இல்லை" போன்ற வசனங்கள் இருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எஸ்டிபிஐ கோரிக்கை வைத்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகமது அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பிப்ரவரி 7, 2026 அன்று அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சியால் வெளியிடப்பட்டு, பின்னர் நீக்கப்பட்ட 'பாயிண்ட் பிளாங்க் ஷாட்' என்ற தலைப்பிலான வீடியோ, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு தரம் தாழ்ந்த செயலாகும்.

17 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், முஸ்லிம்களாகச் சித்தரிக்கப்பட்ட நபர்களை நோக்கி முதல்வர் சர்மா ஒரு ஏர் ரைபிள் மூலம் அடையாள ரீதியாகச் சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனுடன் "அந்நியர்கள் இல்லாத அசாம்", "கருணை கிடையாது", "நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை?" மற்றும் "வங்க தேசத்தவர்களுக்கு மன்னிப்பு இல்லை" போன்ற மிரட்டல் தொனியிலான வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
உண்மையான காட்சிகளையும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான வன்முறையையும் வெளியேற்றத்தையும் பகிரங்கமாகப் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. இது தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து அந்தப் பதிவு விரைவாக நீக்கப்பட்டது. இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட தவறு அல்ல, மாறாகத் திட்டமிட்டு நடத்தப்படும் வகுப்புவாதப் பிரச்சாரத்தின் ஒரு பகுதி.
2025 நவம்பரில் அசாம் சட்டமன்றத்தில் பேசிய சர்மா, 'மியா' முஸ்லிம்கள் தனது ஆட்சியின் கீழ் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களை வெளியேற்றுவதே தனது கடமை என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும், 1951-ல் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை இன்று 40 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், 2041-க்குள் அவர்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்றும் சர்மா கூறி வருகிறார்.
முஸ்லிம் தொழிலாளர்களை மாநிலத்தை விட்டு வெளியேறச் செய்யும் நோக்கில் அவர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவரது அரசு 'லவ் ஜிஹாத்' மற்றும் 'லேண்ட் ஜிஹாத்' ஆகியவற்றுக்கு எதிராகப் பாகுபாடான சட்டங்களை இயற்றியதோடு, மதரஸாக்கள் இடிப்பு, புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கான மியா முஸ்லிம்களின் பெயர்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
முதல்வரின் இத்தகைய பேச்சுகளும் செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. எனவே, ஹிமந்த பிஸ்வா சர்மாவை முதல்வர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும், இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணை நடத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . தேர்தல் ஆதாயங்களுக்காக நமது குடியரசின் மதச்சார்பற்ற தன்மையைத் தியாகம் செய்ய முடியாது" இவ்வாறு அஷ்ரப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications