தமிழக வரலாறு புவியியல் மட்டுமல்ல.. அரசியலை கூட இன்னும் கத்துக்காத பாஜக.. நாக்கு தள்ளி தள்ளாடுது!
சென்னை: பிற மாநிலங்களில் அரசியல் செய்ததைப் போல தமிழகத்தில் பாஜகவால் தம்முடைய ஆட்டத்தை அரங்கேற்ற முடியவில்லை. இதனால் தமிழகத்தில் பாஜக படுபரிதாப நிலையில்தான் இருக்கிறது.
தமிழகம் தவிர்த்து பல மாநிலங்களில் பல கட்சிகளை பந்தாடிய பாஜகவாகவே உருமாற்றி வைத்திருக்கின்றனர். இதேநினைப்பில் அதாவது பீகாரில் ஜேடியூவுக்கு சமமான சீட் வாங்கியதைப் போல அதிமுகவிடம் பேரம் பேசிப் பார்த்தது பாஜக.
அதாவது 100 தொகுதிகளை மொத்தமாக தந்துவிடுங்க.. நாங்க கூட்டணிக்கு கொடுத்து கொள்கிறோம் என்று கணக்குப் போட்டது பாஜக. அதாவது கூட்டணி கட்சிகளையும் பாஜக சின்னத்தில் போட்டியிட வைப்பது அல்லது கூட்டணி கட்சிகளை தன் கட்டுப்பாட்டில் வைப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம்.

பாஜகவுக்கு 20 தான்...
இதற்கு அதிமுக தலைமை துளிகூட இடம்தரவில்லை. இதனால் 60 சீட்டுகள், 40 சீட்டுகள் என சவுண்ட் விட்டுப் பார்த்தது. கடைசியாக போனால் போகிறது என வெறும் 20 சீட்டுகளை மட்டும் கொடுத்தது அதிமுக. திமுக அணியில் காங்கிரஸ் கட்சி கூட 25 இடங்களை வாங்கி இருக்கிறது.

தொகுதி ஆக்கிரமிப்பு
அதேபோல் மத்தியில் தங்களது ஆட்சிதானே.. நாம என்ன சொன்னாலும் அதிமுக கேட்கும் என்ற கணக்கோடு சில தொகுகளை பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே கைப்பற்றி அங்கே வேட்பாளர்களையே நிறுத்தி பிரசாரம் செய்து நெருக்கடி கொடுத்தது பாஜக. அப்படித்தான் சேப்பாக்கத்தில் குஷ்புவும் ராஜபாளையத்தில் கவுதமியும் கேம் ஆடினர்.

பாஜகவின் பரிதாபம்
இந்த போங்கு ஆட்டத்துக்கு பொளேர் என முற்றுப்புள்ளி வைத்து கொடுக்கிற தொகுதியை வாங்கிட்டு போங்க என சொல்லிவிட்டது அதிமுக. இது ஒருபக்கம் இருக்க மாஜி எம்.எல்.ஏ. ஒருவர் ஆடிய ஆட்டத்தை நம்பி பாஜகவும் ஒரு தொகுதியை வாங்கி விட்டது. ஆனால் அந்த மாஜி எம்.எல்.ஏ. அதே தொகுதியில் சொந்த கட்சியில் போட்டியிடுகிறாராம்.

மாஜி எம்.எல்.ஏ.விடம் சிக்கிய பாஜக
அதாவது சர்ச்சைக்குரிய அந்த எம்.எல்.ஏவுக்கு குறிப்பிட்ட தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் போனமுறை அவருக்கு சீட் கொடுத்ததற்கே கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால் தோற்றும் போனார். இந்த முறையும் சொந்த கட்சியில் இருந்து சற்று விலகித்தான் இருந்தார். இதனால் பாஜகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி தொகுதியையும் உறுதி செய்து கொண்டார்.

பாஜகவுக்கு நம்பிக்கை ஏற்படுத்துதல்
அந்த தொகுதியில் பாஜகவும் ஏற்கனவே வென்றிருக்கிறது. அந்த மாஜி எம்.எல்.ஏ மீதும் ஏகப்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இதனால் அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சட்டசபைக்குள் நுழையலாம் என் ப்ளான் பண்ணி தொகுதியை வாங்கி வைத்துவிட்டது. அதேநேரத்தில் தம்மை பாஜக மிரட்டியே கட்சி மாற வைக்கிறது என அந்த மாஜி எம்.எல்.ஏ. புனிதர் வேடமிட்டு புலம்பவும் செய்தார்.

பாஜகவுக்கு குட்பை
இந்த நிலையில் இன்று சொந்த கட்சி அவரை மீண்டும் வேட்பாளராக அறிவிக்க இருப்பதாக தெரிவித்தது. இதையடுத்து பாஜகவுடனான கண்ணாமூச்சி ஆட்டத்தை கைவிட்டுவிட்டாராம் மாஜி எம்.எல்.ஏ. இப்போது தொகுதியை வாங்கி வைத்திருக்கும் பாஜக என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கிக் கிடக்கிறதாம். அரசியல் களத்தில் பழம் தின்றவர்கள் தமிழக அரசியல்வாதிகள்.

தமிழக அரசியலை கற்க வேண்டும்
எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பெயரில் எல்லாம் இவர்களை வளைத்துப் போட்டு வக்கனையாக ஆட்சி செய்துவிட முடியாது என்பதை பாஜக எப்போது புரிந்து கொள்ளப் போகிறதோ? தமிழகத்தின் வரலாறு, புவியியலையும் பாஜக தெரிந்து கொள்ள வேண்டும்; அதைவிட தமிழக அரசியல்வாதிகளின் நேக்கு போக்குகளை முதலில் கற்றுக் கொண்டுவிட்டு அதன் பிறகு ஆடுகளத்துக்கு வரவேண்டும்.












Click it and Unblock the Notifications