ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு!
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எளிமையாக பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. குடிநீர், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் பாதை மற்றும் உதவி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி என்று தேர்தல் நடைபெறும் என்றும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 9 ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினருடன் துணை ராணுவப் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிச் செய்யும் வகையில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்கள் அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் தங்களின் மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கான வசதி வாக்குச்சாவடிக்கு வெளியே செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) வேட்பாளர்களை எளிதாக அடையாளம் காண அவர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெற்று இருக்கும். மற்றும் பெரிய அளவிலான எழுத்துகள் பயன்படுத்தப்படும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வேட்பாளர்கள் தங்களின் உதவி மையங்களை அமைத்துக்கொள்ளலாம். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டுகள் மிகவும் தெளிவாகவும், தேவையான விவரங்களுடனும் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் மூத்த குடிமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க அவர்களுக்கு நேரடி முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் வந்தவுடன் நேரடியாகச் சென்று வாக்களிக்கலாம். மேலும் நடக்க சிரமப்படும் முதியவர்களுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதி இருக்கும். மேலும் முதியவர்கள் தடையின்றி உள்ளே செல்ல சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications