சென்னைவாசிகளே... உங்க வாய்ஸ் சமூக வலைதளத்தில் மட்டும் தானா? ஓட்டு போட மாட்டீங்களா...
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே உள்ளது. இது ஒன்றும் புதிது கிடையாது. தலைநகர் சென்னையை பொறுத்த வரை, சட்டமன்ற தேர்தலானாலும் சரி, மக்களவை தேர்தலானாலும் சரி, அட உள்ளாட்சி தேர்தலானாலும் சரி வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே காணப்படும்.
இந்த வழக்கம் நடப்பாண்டு மக்ளவை தேர்தலிலும் எதிரொலிக்கிறது. காலை 9 மணி நிலவரப்படி, வடசென்னை- 4.58%, தென்சென்னை- 5.67%, மத்திய சென்னை- 3.71% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதே நேரத்தில் 10 முதல் 12 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் பணிநிமித்தமாக தனியாகவோ, குடும்பத்தினருடனோ வெளிமாவட்ட நபர்கள் பல லட்சம் பேர் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களது வாக்குரிமையை விட்டுதர மனமின்றி, அடித்து பிடித்து ரயில் மற்றும் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்து இன்று சொந்த ஊரை அடைந்துள்ளனர்.
சிறிது நேர ஓய்விற்கு பின்னர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வரிசையில் நின்று வெயிலையும் பொருட்படுத்தாது வாக்களித்து வருகின்றனர். ஆனால் தலைநகர் சென்னைவாசிகளோ இன்றைய விடுமுறையை உற்சாகமாகவும், உறக்கத்துடனும் கழிக்கலாம் என முடிவு செய்துவிட்டார்கள் போலும்.
இந்த செய்தியை படித்து கோபமுறும் சென்னை உள்ளூர் மக்களே, கோபத்தை தூக்கி போட்டு வாக்களித்து தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கலாமே...












Click it and Unblock the Notifications