சென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்
சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக, அதிமுக - அமமுக கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பை சேர்ந்த 2 பேர் கத்தியால் குத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் சேலவாயிலில், அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தரப்பில் பணப்பட்டுவாடா செய்ததை தடுக்க சென்ற அமமுக வினருக்கும் - அதிமுகவினருக்கும் இடையே மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கத்தி மற்றும் உருட்டு கட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இந்த மோதலில் இரு தரப்பை சேர்ந்த இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதே போல தேனி மாவட்டத்தில் பணபலத்தால் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் முயற்சி செய்வதாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் அடுத்தடுத்து சிக்கினர்.
மேலும் பணப்பட்டுவாடா செய்வது குறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார் தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் எதிரொலியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications