பட்டப் பகலில் தமிழக அரசு பஸ்சை மறித்து டிரைவருக்கு வெட்டு! கைதானவர் யார் தெரியுமா? போலீஸ் விளக்கம்
சென்னை: ஓடும் அரசு பஸ்ஸை வழிமறித்து ஓட்டுனரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஓட்டுனரை தாக்கிய சுரேஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற சில தினங்களில் ஒரு அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து பெரிய வாளால், தாக்கப்பட்ட சம்பவம் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் ஈட்ட தவறவில்லை.
தாக்குதல் நடைபெற்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இதுபற்றி அவர் கூறுகையில்,

எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது.இதற்கு காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன? இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்

போலீஸ் விளக்கம்
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் முத்து கிருஷ்ணன், இராமேஸ்வரம் முதல் திருப்பூர் வரையான வழிதட பேருந்தை 22.11.2021 அன்று மதியம் 12.00 மணிக்கு, மதுரை தேனி ரோட்டில் உள்ள மாவட்ட பல்பொருள் அங்காடி அருகே ஓட்டிவந்துள்ளார். அப்போது பேருந்தின் பின்னால் இனோவா காரை ஓட்டி வந்த டிரைவர் (சுரேஷ்) பேருந்தின் இடது பக்கமாக முந்தி செல்ல முயன்று பேருந்தின் இடது முன் பக்கத்தில் காரை இடித்துள்ளார்.

தகராறு ஏற்பட்டது
இதனால், பேருந்து ஓட்டுனருக்கும் காரை ஓட்டி வந்தவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது கார் டிரைவர் சுரேஷ் கல்லால் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். பேருந்து ஓட்டுனரை தாக்கியதில் அவருக்கு வலது கை விரலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கைது
இது தொடர்பாக மேற்படி பேருந்து ஓட்டுனர் சி3 எஎஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி சுரேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்வழக்கில் எதிரியான சுரேஷ் என்பவர் எந்த அமைப்பையும் சாராதவர். பேருந்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு சம்மந்தமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications