சீமான் காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு.. துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் போலீஸ் நடவடிக்கை
சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பலாத்கார புகார் அளித்திருந்த சூழலில், இந்த வழக்கை அடுத்த 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை அளிக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாகச் சம்மன் அளிக்கச் சென்ற போது போலீசாருக்கும் சீமான் வீட்டுக் காவலாளிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாகச் சீமானின் காவலாளி அமல்ராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது தமிழ் சினிமா நடிகை ஒருவர் பாலியல் புகாரை அளித்திருந்தார்.

நாம் தமிழர் சீமான்:
அதாவது சீமான் தம்மை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாகவும் பலமுறை கருக் கலைப்பு செய்ய வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இடையிலேயே அந்த நடிகை புகாரை வாபஸ் பெற்றாலும் கூட கிரிமினல் புகார் என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் சமீபத்தில் தான் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதாவது சீமானின் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், "பாலியல் புகார் என்பதால் இது தீவிரமானது. நடிகை தனது புகாரை வாபஸ் பெற்றாலும் விசாரணையைத் தொடர்ந்து நடத்த போலீசாருக்கு அதிகாரம் இருக்கிறது" என்றது. மேலும், வழக்கு விசாரணையை 12 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதுவரை 15 பேர் விசாரித்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட நடிகையிடமும் வாக்குமூலம் பெற்றனர். இந்தச் சூழலில் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தி வளசரவாக்கம் போலீசார் சீமான் இல்லத்திற்குச் சம்மன் அனுப்பினர். சம்மனை வீட்டின் கதவு அருகே சுவரில் போலீசார் ஒட்டி சென்றனர். இருப்பினும், சில நிமிடங்களில் அந்த சம்மனை சீமானின் உதவியாளர் கிழித்ததாக தெரிகிறது.
சீமான் வீட்டில் பரபரப்பு
இது தொடர்பாக விசாரிக்க போலீசார் சீமான் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சீமானின் காவலாளி அமல்ராஜ் ஏதோ சொல்ல இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக கூட்டிச் சென்று கைது செய்தனர். அப்போது அமல்ராஜ் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமல்ராஜிடம் இருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சீமான் வீட்டின் அருகே ஏகப்பட்ட நிர்வாகிகள் குவிந்தனர். மேலும், பாதுகாப்பிற்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவலாளி மீது வழக்குப்பதிவு
அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சீமான் வீட்டுப் பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் ஆயுத தடுப்புச் சட்டப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications